காதல் பயண அனுபவங்களை சொல்லும் படமாக, 'சிக்கு புக்கு' உருவாகியுள்ளது என்று அதன் இயக்குனர் மணிகண்டன் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வகையில் ஆர்யா நிறைய படங்களில் நடித்துவிட்டார். இந்தப் படத்தில்தான் ரொமான்டிக் ஹீரோவாக நடித்திருக்கிறார். அதேபோல, லண்டனில் வசிக்கும் தமிழ் பெண்ணாக வரும் ஸ்ரேயா கிளாமர் இல்லாமல் நடித்திருக்கும் படம் இது. அன்றைய வாழ்க்கையை அன்றே அனுபவிக்க நினைக்கிறவர் ஆர்யா. நாளை பற்றி யோசிப்பவர் ஸ்ரேயா.
இந்த இருவரும் லண்டனில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். கூடவே பயணம் செய்யும் வாய்ப்பு. கொஞ்சம் கூட ஒட்டாத இவர்களுக்குள் காதல் வரும்போது எதிர்பாராத ஒரு நிகழ்வை சந்திக்கிறார்கள். அது இவர்கள் இருவரையும் புரட்டிப்போடுகிறது. இதுதான் கதை. பயணங்கள் வெறும் தூரத்தை கடக்கும் செயல் அல்ல. அற்புதமான அனுபவம். அதற்குள் காதல் வந்தால் எப்படி இருக்கும் என்பதுதான் படம். கர்நாடக பகுதியின் மழைக்காடுகள், காரைக்குடியின் வெயில் இரண்டிலும் இருவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக படமாக்கி உள்ளோம். அடுத்த மாதம் வெளிவருகிறது. இவ்வாறு மணிகண்டன் கூறினார். Source: Dinakaran
Post a Comment