12/22/2010 10:51:11 AM
'மன்மதன் அம்பு' படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பாடலை நீக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தப் படத்துக்காக நான் எழுதிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை அறிவேன். இதை தணிக்கை செய்த குழு இப்பாடலில் புண்படுத்தக்கூடிய வரிகள் ஏதுமில்லாததால் அதை அனுமதித்தனர். இதுவே எனது நிறுவனத்தின் படமாக இருந்தால் கண்டிப்பாக அந்த வரிகள் ஆன்மிகவாதிகளைப் புண்படுத்தாது என்ற நம்பிக்கையுடன் வெளியிட்டிருப்பேன். இது ரெட் ஜெயன்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படம் என்பதாலும் எல்லாரும் எம்மதத்தவரும் படம் காண வரவேண்டும் என்ற எண்ணத்திலும் இப்பாடல் காட்சியை நாங்களே முன் வந்து நீக்குகிறோம். என் குடும்பத்தில் வைணவரும் சைவரும் இஸ்லாமியரும் கிறிஸ்துவரும் இருக்கின்றனர். அவர்களில் பலரும் என்னை போல் அல்ல. தெய்வ விசுவாசிகள். நான் பகுத்தறிவுவாதி. அது அவ்வாறாகவே இருந்து வருகிறது. அதுவாகவே திகழும்.
'மன்மதன் அம்பு' வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் கலை ஊழியன் மட்டுமே. அரசியல்வாதிகளின் இடையூறுகள் எனக்குப் புதிதல்ல. மதமும் அரசியலும் கலந்த இந்த சிக்கலில் நல் ரசனை பலியாகாது இருக்கவும் அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மற்றபடி பகுத்தறிவு பாதையில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கு நிறைய இடமுண்டு. இவ்வாறு கமல்ஹாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment