2/23/2011 3:05:00 PM
இலங்கை பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமருக்கு தந்தி அனுப்புமாறு ரசிகர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்தும், தாக்குதலை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் நாகை காடம்பாடியில் உள்ள வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் மைதானத்தில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை வகித்தார். நடிகர் விஜய் பேசியதாவது: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிப்பதற்காக வந்திருக்கிறேன். தாயை அடித்தால் மகன் எப்படி வேகப்படுவானோ அந்த உணர்வோடுதான் நான் வந்திருக்கிறேன்.சென்னை முதல் குமரி வரை 7 கடலோர மாவட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் உயிரை பணயம் வைத்து தொழில் செய்கிறார்கள்.
அவர்களின் உயிரோடு இலங்கை அரசு விளையாடி வருகிறது. ஆயிரக்கணக்கான மீனவர்கள் தாக்கப்பட்டும், 543 மீனவர்கள் கொல்லப்பட்டும் உள்ளனர். நாளைக்கு காலை எல்லாரும் மீனவர் பிரச்னை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு தந்தி அனுப்புங்க. நீங்க அனுப்புற லட்சக்கணக்கான தந்திகள் பிரதமர் வீட்டு கதவையும், தமிழக முதல்வர் வீட்டு கதவையும் தட்டட்டும். இது தமிழக மீனவர் பிரச்னைக்கு சின்ன ஆதாரமாக இருக்கட்டும். பாண்டியன் குடும்பத்துக்கும், ஜெயக்குமார் குடும்பத்துக்கும் தலா ரூ.50,000 நிதி கொடுக்கிறேன். நாளை காலை நாகை மாவட்ட தலைவர் சுகுமாறன் இதை உரியவர்களிடம் தருவார்.இவ்வாறு நடிகர் விஜய் பேசினார். தடியடி:முன்னதாக, விஜய்யை பார்க்கும் ஆர்வத்தில் மேடையில் 500க்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
Post a Comment