2/9/2011 11:43:40 AM
திருநங்கை கல்கி ஹீரோயினாக நடிக்கும் 'நர்த்தகி' படப் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், தயாரிப்பாளர் சங்க துணை தலைவர் அன்பாலயா பிரபாகரன் வெளியிட, எக்ஸ்னோரா நிர்மல், இயக்குனர் ஜனநாதன் பெற்றுக் கொண்டனர். விழாவில் ஜனநாதன் பேசியதாவது: ஒரு காலகட்டம் வரை திருநங்கைகளை தமிழ் சினிமா, காமெடிக்காக பயன்படுத்தி வந்தது. நான் இயக்கிய படங்களில் கூட திருதங்கைகளின் பிரச்னை பற்றி சொல்லவில்லை. நயன்தாரா, ஜெயம்ரவி என்று கமர்ஷியல் வழியைத்தான் தேர்ந்தெடுத்தேன். ஆனால் 'புன்னகைப்பூ கீதா' என்ற பெண் தயாரிக்க, விஜயபத்மா என்ற இன்னொரு பெண் இயக்க, திருநங்கை கல்கி ஹீரோயினாக நடிக்க, படம் உருவாகியிருப்பது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை காட்டுகிறது. இப்படிப்பட்ட முயற்சிகள்தான் தமிழ் சினிமாவை உலகத் தரத்துக்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. திருநங்கைகளும் மனித சமூகத்தின் முக்கிய அங்கம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். இவ்வாறு ஜனநாதன் பேசினார். பாடலாசிரியர் நா.முத்துக்குமார், நடன இயக்குனர் ரகுராம், சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் உட்பட பலர் பேசினார்கள்.
Post a Comment