4/15/2011 1:02:25 PM
சென்னை: இசை நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்ற பிரபல பாடகி சித்ராவின் மகள் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தார். சென்னைக்கு கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்குகள் செய்யப்படுகிறது. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழி படங்களில் ஏராளமான பாடல்கள் பாடியிருப்பவர் சித்ரா. 'சின்னக்குயில்' என்று இவருக்கு ரசிகர்கள் அடைமொழி கொடுத்துள்ளனர். இவரது கணவர் விஜய கிருஷ்ணன். திருமணம் ஆகி நீண்ட வருடங்களுக்கு பிறகு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது சிறுமிக்கு 8 வயதாகிறது. பள்ளியில் படித்து வந்தார்.
இந்நிலையில் ஆஸ்கார் விருது வென்ற ஏ.ஆர்.ரகுமானுக்கு துபாயில் உள்ள சார்ஜா மைதானத்தில் நேற்று பாராட்டு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்று பாடுவதற்காக மகளுடன் துபாய் சென்றார் சித்ரா. அங்கு மீடியா சிட்டி அருகே எமிரேட் ஹில்ஸ் குடியிருப்பில் உள்ள தனது குடும்ப நண்பர் வீட்டில் தங்கினார். அந்த வீட்டில் நீச்சல் குளம் உள்ளது. நேற்று காலை நீச்சல் குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று தவறி குளத்தில் விழுந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுதார் சித்ரா. நேற்று இரவே மகளின் உடலுடன் துபாயிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு இன்று காலை சென்னை வந்தார். சாலிகிராமம் தேவராஜ் நகரில் உள்ள அவரது வீட்டில் குழந்தையின் உடலுக்கு ஏராளமான திரையுலகினர், பின்னணி பாடகர், பாடகிகள் இறுதி அஞ்சலி செலுத்த வந்த வண்ணம் உள்ளனர்.இன்று மாலை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோ பின்புறம் உள்ள மயானத்தில் இறுதி சடங்குகள் நடக்கிறது.
Post a Comment