7/21/2011 10:24:17 AM
இலங்கை கிளிநொச்சியில் கச்சேரி நடத்த சென்ற பாடகர்கள் மனோ, கிரிஷ், பாடகி சுசித்ரா ஆகியோர், கடும் எதிர்ப்பு காரணமாக நிகழ்ச்சியை ரத்து செய்தனர். இலங்கையில் உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் கிளிநொச்சியில் தமிழக பின்னணி பாடகர்களை அழைத்து இசை கச்சேரி நடத்த, இலங்கை அதிபர் ராஜபக்சே கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இதற்காக சென்னையில் இருந்து நேற்று காலை பாடகர்கள் மனோ, கிரிஷ், பாடகி சுசித்ரா ஆகியோர் கொழும்பு சென்றனர். இது ஈழத்தமிழர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், கடும் எதிர்ப்பு கிளம்பியது. மதிமுக பொதுசெயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள், நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பாடகர்கள் கச்சேரியை ரத்து செய்துள்ளனர்.
இதுபற்றி பாடகர் மனோ கூறும்போது, ''கிளிநொச்சியில் ஸ்டேடியம் திறப்புவிழா என்று பாட அழைத்திருந்தனர். தமிழர்கள் மத்தியில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று நினைத்துதான் சம்மதித்தோம். இங்கு வந்தபிறகுதான் ராஜபக்சே கலந்துகொள்ளும் நிகழ்ச்சி என்று தெரிந்தது. இதையடுத்து நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம்'' என்றார்.
Post a Comment