பெங்களூர் அடுக்குமாடி வீட்டில் விபச்சாரம்- நடிகை சனா கான் கைது!!

|

பெங்களூர்: பெங்களூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மும்பையைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான சனா கான், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பெண் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூர் கோரமங்களா 6-வது பிளாக்கில் விவி நகரில் உள்ள அனிஷா மெடோஸ் அபார்ட்மெண்ட்டில் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் மாறுவேடத்தில் வாடிக்கையாளர் போல சென்று விபசார புரோக்கர்களை அணுகினர். அவர்கள் மூலம் சில போலீசார் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றனர். அங்கு விபசாரம் நடப்பது உறுதியானது.

அதில் நடிகை ஒருவர் இருப்பதையும் தெரிந்து கொண்ட போலீசார், வெளியில் காத்திருந்த தனிப் படைக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் அதிரடியாக அந்த வீட்டுக்குள் புகுந்து விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களை கைது செய்தனர்.

அப்போது விபசாரத்தில் ஈடுபட்ட நடிகை சனா கானும் சிக்கினார். சனா கானுடன் விபசாரத்தில் ஈடுபட்ட உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த காலிதா (28), நிகிதா ஜோசப் (21), இவர்களது மேனேஜரான ராஷ்மி, புரோக்கர்களான சமீர், கவிராஜ், வினய்குமார் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இரு புரோக்கர்களான சிவப்பிரகாஷ், உஸ்மத் ஆகியோர் தப்பிவிட்டனர்.

இந்த வீட்டில் இருந்து ரூ. 40,000 பணம், 2 லேப்டாப்கள், ஆபாசபட சி.டி.க்கள், கேமராக்கள், 12 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சில பணக்கார வாடிக்கையாளர்கள் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதை படம் பிடித்தும் வீடியோ எடுத்தும் வைத்துக் கொண்டு அவர்களை மிரட்டியும் இவர்கள் பணம் பறித்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சனா கானுக்கும் தமிழ் நடிகை சனா கானுக்கும் தொடர்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Post a Comment