கணவர் விரும்பியதால் மீண்டும் படங்களில் நடிக்க வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார் நவ்யா நாயர். சொன்னதோடு நில்லாமல், தன் குழந்தையுடன் வந்து ஒரு படத்தின் முதல்நாள் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.
தமிழில் அழகிய தீயே, மாயக்கண்ணாடி உள்பட சில படங்களில் நடித்தவர் நவ்யா நாயர். 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பு அவர் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.
கேரள மாநிலம் கொச்சி அம்பலக்காடு பகுதியில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார் நவ்யா நாயர். பல தயாரிப்பாளர்கள் கேட்டும் கூட படங்களில் நடிக்க விரும்பவில்லை என்றும் கூறிவிட்டார்.
இதனிடையே பிரபல மலையாள இயக்குனர் சைஜுஅந்திக்காடு இயக்கும் 'நம்மோட வீடு' என்ற படத்தில் மோகன்லாலுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படத்தின் படப்பிடிப்பு கொல்லம், ஒத்தப்பாலம் பகுதியில் நடந்து வருகிறது.
படப்பிடிப்புக்கு தனது ஒன்றரை வயது மகன் சாய்கிருஷ்ணாவுடன் வந்திருந்த நவ்யா, தனது மறுபிரவேசம் குறித்து கூறுகையில், "மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. குழந்தை மற்றும் கணவருடன் சந்தோஷமாகவே குடும்பம் நடத்தி வருகிறேன். பல படங்களை தவிர்த்து வந்த நிலையில் நம்மோட வீடு படத்தின் கதையை இயக்குனர் சைஜுஅந்திகாடு கூறியபோது, எனது கணவருக்கு கதை பிடித்துப்போனது. அவர்தான் என்னை நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து படங்களில் நடிப்பது குறித்து கணவர்தான் முடிவு செய்ய வேண்டும். இப்போதைய எனது உலகம் எல்லாமே கணவரும், குழந்தையும்தான்," என்றார்.
Post a Comment