இசைத் தொகுப்பாக உருவெடுக்கும் கமல்ஹாசனின் பாடல்கள்!

|

Voice Kamal Hassan Become Record

கமல்ஹாசன் இதுவரை திரைப்படங்களில் தனது சொந்தக் குரலில் பாடியுள்ள பாடல்கள் அனைத்தையும் தொகுத்து தனி இசைக் கோர்வையாக உருவாக்கும் முயற்சி ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாம்.

நடிப்பு உள்ளிட்ட வேலைகளோடு அவ்வப்போது பாடவும் செய்வார் கமல். அந்தரங்கம் படத்திலிருந்துதான் கமல்ஹாசன் பாட ஆரம்பித்தார். 1975ம் ஆண்டு வெளியான படம் அந்தரங்கம். ஞாயிறு ஒளிமழையில் திங்கள் குளிக்க வந்தாள் என்று தொடங்கும் அந்தப் பாடல் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றார். அதன் பின்னர் அவ்வப்போது தொடர்ச்சியாக பாடி வந்த கமல்ஹாசன் வாய்ப்பு கிடைக்கும்போது குரல் கொடுக்கத் தவறியதில்லை.

பன்னீர் புஷ்பங்களே, நினைவோ ஒரு பறவை, கடவுள் அமைத்து வைத்த மேடை, இஞ்சி இடுப்பழகி,சுந்தரி நீயும் சுந்தரன் நானும், கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே, தென் பாண்டிச் சீமையிலே, கடவுள் பாதி மிருகம் பாதி, கொம்புல பூவ சுத்தி, ஆழ்வார்ப்பேட்டை ஆளுடா, காசு மேல காசு வந்து, கலக்கப் போவது யாரு, இஞ்சிரங்கோ இஞ்சிரங்கோ, ஒன்னவிட இந்த உலகத்துல உசந்தது யாருமில்லை உள்ளிட்டவை அவர் பாடிய ஹிட் பாடல்களில் சில.

உல்லாசம் படத்தில் அவர் அஜீத்துக்காக ஒரு பின்னணிப் பாடல் பாடியிருந்தார். முத்தே முத்தம்மா என்று ஆரம்பிக்கும் அந்தப் பாடலுக்கு இசையமைத்திருந்தவர் கார்த்திக் ராஜா. அதேபோல தனுஷ் நடித்த புதுப்பேட்டை படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் பாடியுள்ளார்.

கடைசியாக அவரது குரலில் வந்த பாடல் மன்மதன் அம்பு படத்தில் இடம் பெற்ற நீலவானம்...நீயும் நானும்..

இப்படி கமல்ஹாசனின் குரலில் வெளியான பாடல்களின் எண்ணிக்கை 77 ஆகும். இந்தப் பாடல்களையெல்லாம் தொகுத்து ஒரு தனி இசைக் கோர்வையாக உருவாக்கும் முயற்சி ஒன்று தொடங்கியுள்ளதாம். அனைத்துப் பாடல்களையும் டிஜிட்டல் முறையில் மெருகூட்டி, புத்தும் புதுப் பொலிவுடன் வெளியிடப் போகிறார்களாம்.

 

Post a Comment