அடித்து கொடுமைப்படுத்துவதாக கணவர் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்

|

Former Miss World Yukta Mookhey Complaint Against Hubby

மும்பை: முன்னாள் உலக அழகியும், நடிகையுமான யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

கடந்த 1999ம் ஆண்டு உலக அழகி பட்டம் வென்றவர் யுக்தா முகி. அதன் பிறகு அவர் சில இந்தி படங்களில் நடித்தார். தமி்ழில் அஜீத் குமார், ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் படத்தில் யுக்தா முகி, யுக்தா முகி என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். பின்னர் பெரிய பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பிரின்ஸ் டுலியை கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் தேதி மணந்தார். அதன் பிறகு திரையுலகில் இருந்து தள்ளியே இருக்கிறார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் யுக்தா முகி தனது கணவர் மீது போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில், பிரின்ஸ் டுலி தன்னை அவ்வப்போது அடித்து கொடுமைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அவரது புகாரின்பேரில் டுலி மீது தண்டிக்க இயலாத குற்றத்தின் கீழ் அம்போலி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தால் நீதிமன்ற உத்தரவின்றி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவோ, கைது செய்யவோ முடியாது.

முன்னாள் உலக அழகியான யுக்தா முகி தனது கணவர் மீது புகார் கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Post a Comment