இலங்கைத் தமிழர்கள் அகதிகள் அல்ல.. அதிதிகள் - வைரமுத்து

|

Treat Sri Lankan Tamil S As Our Guests Vairamuthu

சென்னை: ஈழத்திலிருந்து ஏதிலிகளாக வந்துள்ள தமிழர்களை அகதிகளாக நடத்த வேண்டாம்... அதிதிகளாக (விருந்தாளிகளாக) நடத்த வேண்டும், என்றார் கவிஞர் வைரமுத்து.

இலங்கை அகதிகளின் அவலங்களைப் பின்னணியாகக் கொண்டு இயக்குநர் சீனு ராமசாமி உருவாக்கியுள்ள புதிய படம் ‘நீர்ப்பறவை'.

இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் கொடூரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று மாலை நடந்தது.

படத்தின் முழுப் பாடல்களையும் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து விழாவில் பேசுகையில், "இந்த படம் ஒரு முக்கியமான விஷயத்தைத் தொட்டுப்போகிறது. இலங்கை கடலுக்குள் படகுக்குள் சுடப்பட்டுக் கிடந்த ஒரு உடலுக்கு பக்கத்தில் வீறிட்டுக்கிடக்கிற ஒரு சிறுவன் கடலிலேயே அனாதையாகிறான். பின்னர் அவன் தமிழ்நாட்டுக்கரையில் வளர்கிறான். இதுதான் கதை.

இப்படத்திற்கு நான் எழுதியிருக்கும் பாடலில்,

"மழைச்சொட்டு மண்ணில் விழுந்தால்
மண்ணகம் அதை மறுப்பதில்லை
இன்னொரு மனிதன் உள்ளவரைக்கும்
இங்கு யாரும் அகதியில்லை," என்று கூறியுள்ளேன்.

தமிழ்நாட்டு அரசாங்கமாகட்டும், தொண்டு நிறுவனங்களாகட்டும், தமிழ்நாட்டு அரசியல் தலைவர் களாகட்டும், இலங்கையில் இருந்து அகதிகளாக வந்தார்கள் என்று சொல்லவேண்டாம்... இடம்பெயர்ந்தவர்கள் என்று சொல்லுங்கள்.

அகதி என்ற வார்த்தைக்கும் அதிதி என்ற வார்த்தைக்கும் மிக மெல்லிய ஒலி வேறுபாடு உண்டு. அகதி என்றால் ஏதுமற்றவர். அதிதி என்றால் விருந்தாளி. நாம் அவர்களை விருந்தாளிகளாக நடத்தவேண்டும். திரும்பிப் போய்விடுபவர்கள் அவர்கள்.

எனவே இந்திய எல்லைக்குள் வரும் இலங்கைத் தமிழர்களை அகதிகளாக நடத்தக்கூடாது. அவர்களை அதிதிகளாக அதாவது விருந்தாளிகளாக நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

 

Post a Comment