ஆண்டு இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம்... வடகிழக்குப் பருவமழை வருமா வராதா என்ற நிலை... ஆனால் வேறொரு மழை இடி மின்னலுடன் பொழியத் தயாராகிறது. அது ஏ ஆர் ரஹ்மானின் இசை விழா!
இந்த ஆண்டின் இறுதியில் சென்னையில் மிகப் பிரமாண்டமாக இசை நிகழ்ச்சி ஒன்றை தலைநகர் சென்னையில் நடத்தவிருக்கிறார் ரஹ்மான்.
தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இடம் அதே நேரு உள்விளையாட்டு அரங்கம்தான்.
கடந்த ஆண்டிலிருந்து 'இசை விடுமுறையில்' இருந்தார் ஏ ஆர் ரஹ்மான். எனவே அவர் இசையில் புதிய ஆல்பங்கள் எதுவும் தமிழில் வரவில்லை. இது ரஹ்மானின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது.
அதற்கு வட்டியும் முதலுமாக புதிய தமிழ்ப் படங்களுக்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டிருந்தார் ரஹ்மான். அந்த ஐந்தில் முதலில் வரவிருப்பது ரஜினியின் கோச்சடையான்.
இப்போது கோச்சடையானுக்கும் முன்பாகவே இசை விருந்து படைக்க வருகிறார் இசைப்புயல்...
இனிய வரவு!