சென்னை: பொதுவெளியில் சாதித் துவேஷ கருத்துக்களைப் பரப்பிய பாடகி சின்மயி மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் மனு கொடுத்துள்ளது புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் விழிப்புணர்வு பேரவை எனும் அமைப்பு.
சின்மயி தனது ப்ளாக், ட்விட்டர் போன்றவற்றில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். இடஒதுக்கீடு குறித்து கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் பெரும்பான்மையோர் சின்மயிக்கு எதிராக அணி திரள ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில், புரட்சியாளர் அம்பேத்கர் விழிப்புணர்வு பாசறை அமைப்பைச் சார்ந்த நீலமேகம், வழக்கறிஞர் ரஜினி ஆகியோர் சென்னை மாநகர கமிஷனரிடம் சின்மயி மீது தலித்துக்கள், மீனவர்கள், இஸ்லாமியர்களை இழிவாகப் பேசியதற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிய செய்யக் கோரி மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சின்மயி விவகாரம் வேறு கோணத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சின்மயி கைதாவாரா? அல்லது பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் சைடு வாங்கியதைப் போல இதிலும் நடந்து கொள்ளுமா போலீஸ் என்ற கேள்வி எழுந்துள்ளது.