நீர்ப்பறவையில் டப்பிங் பேசாதது ஏன்?

|

சென்னை : நாளை ரிலீஸ் ஆகிறது 'நீர்ப்பறவை'. இதில் நாயகியாக நடித்திருக்கும் சுனேனா, கூறியதாவது: ஒரு நடிகைக்கு எப்போதாவதுதான் வாழ்நாள் கேரக்டர் கிடைக்கும். நீர்ப்பறவை படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. படப்பிடிப்புக்கு முன்பே இயக்குனர், 'பல நாள் வெயிலில் கஷ்டப்பட வேண்டியது இருக்கும். மேக்,அப் இருக்காது, கடலுக்குள் படப்பிடிப்பு இருக்கும்' என்றெல்லாம் சொன்னார்.  ஒப்புக் கொண்டு நடித்தேன்.

ஆனால் கேரக்டராக மாறியபின் அந்த கஷ்டம் தெரியவில்லை. நான் நடித்த மற்ற படங்களில் நிறைய வசனம் பேசுவேன். இதில் குறைவு. சர்ச்சோடு தொடர்புடைய அமைதியான பெண். அதனால் கண்களாலும், முகபாவனையாலும் பேச வேண்டியதை உணர்த்த வேண்டும். ஆரம்பத்தில் தடுமாறினேன். பிறகு இயக்குனர் கொடுத்த பயிற்சியால் பழகிவிட்டேன். கமர்சியல் படங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற படத்தில் நடிக்கும்போது மனதுக்கு திருப்தியாக இருக்கிறது. நான் டப்பிங் பேசினால் தேசிய விருது கிடைக்க வாய்ப்பிருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் ஒரு காரணத்துக்காக நான் டப்பிங் பேசவில்லை. அது என்ன என்பதை படம் பார்க்கும்போது உணர்வீர்கள்.
 

Post a Comment