கதை திரைக்கதை வசனம் எழுதி அருள் இயக்கும் இந்தப் படத்துக்கு, மன்னாரு புகழ் உதயன் இசையமைக்கிறார்.
செய்த தவறை சரிசெய்வது அல்லது பிராயச்சித்தம் தேடுவதுதான் வாழ்க்கையின் உன்னதமான பகுதி என்பதைச் சொல்லும் வகையில் இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படம் குறித்து இயக்குநர் அருள் கூறுகையில், "வடு என்றால் ஒரு காயம் உண்டாகி அதனால் ஏற்படும் தழும்பு என்று அர்த்தம். காயம் மறைந்துவிடும். ஆனால் வடு மறையாது.
சின்ன வயதில் ஒரு பையன் செய்த தவறு ஒரு பெண்ணை, அவள் படிப்பு ரீதியாக எந்த அளவு பாதிக்கிறது என்பதும், அந்த தவறுக்கு பரிகாரம் தேட அந்த பையன் பின்னர் தன் வாழ்க்கையை அர்ப்பணிப்பதும்தான் இந்தப் படம்," என்றார்.
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, ரீலீஸாகும் வரை ஹீரோ ஹீரோயின் யார் என்பதை வெளியில் சொல்லப் போவதே இல்லை என்கிறார் இயக்குநர்.
உதயன் இசையில் நான்கு பாடல்கள் இடம்பெறுகின்றன படத்தில். பின்னணி இசைக்கு செமத்தியான வேலை காத்திருக்கிறதாம் படத்தில். 'நமக்கு அதானே வேணும்... பின்னணி இசையில் குறிப்பிட்டுச் சொல்லும் படமாக வடு அமையும்," என்கிறார் உதயன்.
ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்ய, ராஜாமுகமது படத்தொகுப்பை கவனிக்கிறார்.