பப்ளிசிட்டியை மனதில் வைத்து பிரபலங்களின் மோதல் அல்லது அவர்கள் தொடர்பான சர்ச்சையை மையப்படுத்தி படமெடுப்பது கோடம்பாக்கத்தில் அடிக்கடி நடப்பது.
இப்போது இயக்குநர் எஸ் ஜே சூர்யா அந்த வேலையைக் கையிலெடுத்துள்ளார். இளையராஜா உச்சத்திலிருந்த போது, அவரிடம் பணியாற்றி வந்த ஏ ஆர் ரஹ்மான் திரையுலகில் தனி இசையமைப்பாளராக புயலாய் நுழைந்தார்.
அன்றிலிருந்து இளையராஜா Vs ரஹ்மான் என்ற சூழல் மீடியாவில் தோன்றிவிட்டது. நிஜத்தில் இந்த இருவரும் ஒன்றாக மேடைகளைப் பகிர்ந்து கொண்ட போதும், ரசிகர்கள் இரு பிரிவாக பிரிந்து நிற்க ஆரம்பித்துவிட்டனர்.
இந்த மோதலைத்தான் இசை என்ற பெயரில் படமாக எடுக்கிறாராம் எஸ் ஜே சூர்யா.
ஏ.ஆர். ரஹ்மான் வேடத்தில் எஸ்.ஜே. சூர்யாவும், இளையராஜாவாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர்.
இந்தப் படம் குறித்தும், கதை குறித்தும் எஸ்ஜே சூர்யா கூறுகையில், "இந்தப் படத்தின் கதை இரண்டு இசையமைப்பாளர்களை பற்றியதுதான்.
ஆனால் அது இளையராஜா, ரஹ்மான் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. காரணம், புது இசையமைப்பாளர் அறிமுகமாகும்போது மூத்த இசையமைப்பாளர் தனக்கு பாதிப்பு நேரும் என கருதுவது இயல்புதான். சினிமாவில் இது பொதுவான பிரச்சினைதான். கே.வி.மகாதேவன் உச்சத்தில் இருந்தபோது எம்.எஸ்.விஸ்வநாதன் வந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் உச்சத்திலிருந்தபோது இளையராஜா அதிரடியாக சாதிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு ஏ.ஆர்.ரஹ்மான்.
இது சினிமாவில் தொன்று தொட்டு இருந்துவரும் மாறுதல்கள். இந்த நான்கு இசையமைப்பாளர்களுக்கும் நான் ரசிகன். அதனால் பொதுவான ஒரு ட்ரெண்டை படமாக்குகிறேன். அதில் இளையராஜா - ரஹ்மான் என அர்த்தப்படுத்திப் பார்ப்பது தேவையற்றது," என்றார்.
Post a Comment