கமலுக்கே இப்படின்னா, மத்தவங்களுக்கு என்னவெல்லாம் நடக்குமோ?: குஷ்பு

|

Bollywood Supports Kamal

மும்பை: விஸ்வரூபம் பிரச்சினையில் கமல்ஹாஸனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் பாலிவுட் நடிகர்கள் ஷாரூக்கான் உள்ளிட்டோர். சினிமாவுக்காகவே வாழும் கமலுக்கே இப்படி நடக்கிறது என்றால் மற்றவர்களுக்கு என்னவெல்லாம் நடக்குமோ என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் பட பிரச்சினையில் நடிகர் கமல்ஹாசனுக்கு அவருடைய நீண்ட கால நண்பரும், சூப்பர் ஸ்டாருமான ரஜினிகாந்த் ஏற்கனவே ஆதரவு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, வேற்று மொழி நடிகர் நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்தி நடிகர் ஷாரூக்கான் கூறுகையில், "இத்தகைய பிரச்சினைகள் எங்களுக்கு புதிதல்ல. கமலுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது. தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துவிட்டால், குறிப்பிட்ட படம் நாடு முழுவதும் மக்கள் பார்ப்பதற்கு ஏற்றது என்பதே அர்த்தம். கமல்ஹாசன் சீனியர் கலைஞர். அவர் மீது நான் மிகுந்த மதிப்பு வைத்து இருக்கிறேன். விஸ்வரூபம் படத்தின் சில காட்சி அமைப்புகளில் என்னுடைய ரெட் சில்லிஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது," என்றார்.

நடிகர் நாகார்ஜுன் கூறுகையில், "கமல்ஜியை நான் நீண்ட காலமாக அறிவேன். அவருடைய தீவிர ரசிகன் நான். இந்தியா உருவாக்கிய மிகச்சிறந்த நடிகர்களில், அவரும் ஒருவர். அப்படிப்பட்டவர், சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவார் என்று நான் நினைக்கவில்லை," என்று கூறியுள்ளார்.

நடிகர் சித்தார்த் பேசுகையில், "மிகச்சிறந்த தமிழ் நடிகரான கமல்ஹாசன், தமிழ்நாட்டில் இருந்து வெளியேறுவதாக சொல்வதை கேட்ட போது இதயம் நொறுங்கி விட்டது. தமிழ்நாட்டில் விஸ்வரூபம் படம் ஓட தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு துயரமான நாள். மோசமான வாரம்", என்றார்.

நடிகை ஜெயப்பிரதா வெளியிட்டுள்ள அறிக்கையில், "விஸ்வரூபம் படம் தொடர்பான அரசியல் தேவையற்றது, அர்த்தமற்றது. கமல், தேவையின்றி துன்புறுத்தப்படுகிறார். அவரது நிலைமையில் இருந்தால், நானும் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறி இருப்பேன். அவரது படத்தில் எப்போதுமே 'மெசேஜ்' இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் மகேஷ்பட் கூறுகையில், "கமல்ஹாசன், நாட்டின் பொக்கிஷம். அவர் துன்புறுத்தப்படுவது, ஒட்டுமொத்த திரையுலகுக்கும் இருண்ட தருணம்," என்றார்.

தணிக்கை வாரிய தலைவர் லீலா சாம்சன் இதுபற்றி கூறுகையில், "தணிக்கை சான்றிதழ் பெற்ற நிலையிலும், கமல்ஹாசன் வேட்டையாடப்படுகிறார். இதுபோல், மாநில அரசு எப்படி தடை செய்ய முடியும் என்று நாங்கள் ஆய்வு செய்வோம்," என்றார்.

இது குறித்து குஷ்பு கூறுகையில்,

50 ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து தான் சம்பாதித்த அனைத்தையும் படத்தில் போட்டுவிட்டு, சினிமாவுக்காகவே வாழும் ஒருவருக்கே இப்படி நடந்தால் மற்றவர்களுக்கு என்னவெல்லாம் நடக்கும் என்று வியக்கிறேன் என்றார்.

சபானா அஸ்மி கூறுகையில்,

சென்சார் போர்டு அனுமதி அளித்த பிறகு எந்த மாநில அரசும் படத்திற்கு தடை விதிக்க முடியாது. விஸ்வரூபம் தங்கள் மனதை புண்படுத்துகிறது என்று நினைப்பவர்கள் அதை பார்க்க வேண்டாம். அவர்கள் எப்படி படத்தை பார்க்க விரும்புபவர்களின் உரிமையை பறிக்க முடியும்? படத்தைப் பார்க்க வேண்டும் என்று யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லையே. கருத்து சுதந்திரம் குறைந்து கொண்டிருக்கிறது என்றார்.

பிரியதர்ஷன் கூறுகையில், கருத்து சுதந்திரத்திற்கு தடைபோட யாருக்கும் உரிமை இல்லை என்றார்.

 

Post a Comment