தெலுங்கு நடிகர் ராணாவின் இந்திப் பட பிரவேசம் குறித்து கமெண்ட் அடிக்கப் போய் ஏகத்துக்கும் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம்.
தென்னிந்திய நடிகர்களால் பாலிவுட்டில் தாக்குப் பிடிக்க முடிவதில்லையே.. ஏன்? டெல்லி பத்திரிகை ஒன்றின் இந்தக் கேள்விக்கு விக்ரம் சொன்ன பதில்தான் லடாய்க்குக் காரணம்.
இந்தியில் ராவண், டேவிட் என இரண்டு படங்களில் நடித்தார் விக்ரம். இரண்டும் அவுட். அதனால்தான் இந்தக் கேள்வி.
இதற்கு பதிலளித்த விக்ரம், "தென்னிந்தியாவில் எனக்கென்று பெரிய பெயர் இருக்கிறது. நல்ல சம்பளம். ஆனால் இங்கு முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். எனவே இருக்கிற பெயரை விட்டுவிட்டு வரமுடியாது. ஹீரோயின்கள் கதை வேறு. அவர்களுக்கு நல்ல பப்ளிசிட்டி கொடுத்து, சரியான இடத்தில் சேர்த்து விடுகிறார்கள்," என்றவர் அத்துடன் நிறுத்திக் கொண்டிருந்தால் பரவாயில்லை. தேவையில்லாமல் ராணாவை வம்புக்கிழுத்துள்ளார்.
அவர் கூறுகையில், "இப்போ தெலுங்கு நடிகர் ராணாவைப் பாருங்க... தெலுங்கில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் உடனே இந்திக்கு வந்துவிட்டார். இதனால் அவர் தெலுங்கில் தன் இடத்தை இழந்துவிட்டார். அவரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
என் நிலைமை அப்படியில்லை. நான் ரூ 145 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் படம் நடிக்கிறேன். அதையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு வர முடியாது. எனக்கு தென்னிந்திய படங்கள்தான் முக்கியம்," என்றார்.
ராணா காட்டம்
விக்ரமின் இந்தப் பேட்டி ராணாவை கோபப்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த ராணா, "டியர் மிஸ்டர் விக்ரம்... பத்திரிகைப் பேட்டிகளில் ஓரிரு இடங்களில் நீங்கள் என்னைப் பற்றி கமெண்ட் அடித்திருக்கிறீர்கள். இது தேவையற்றது. உங்கள் கேரியரில் மட்டுமே நீங்கள் அக்கறை காட்டினால் நல்லது. நான் நடிக்க வந்து இரண்டரை ஆண்டுகள்தான் ஆகின்றன. நீங்கள் நடிக்க வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. சமீப காலங்களில் மட்டுமே 10 பெரும் தோல்விப் படங்களைக் கொடுத்துள்ளீர்கள். எனவே உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். என் வேலையை நான் பார்க்கிறேன். இதனால் நான் உங்களை வெறுத்துவிடவில்லை. இப்போதும் உங்களின் சில படங்களுக்கு நான் தீவிர ரசிகன்," என்று திருப்பியடித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவின் ஜாம்பவான் டி ராமாநாயுடுவின் பேரன்தான் இந்த ராணா.
சரீ.. ராணா மீது ஏன் விக்ரமுக்கு இத்தனை காட்டம்... த்ரிஷாவைக் கேட்டா தெரியுமோ!!!
+ comments + 1 comments
en vaya kotuthu ethaiyo punnakkikireenga vikram.Thrisha santaiku vantuvanga
Post a Comment