'பிரபாகரனைப் பற்றி படமெடுக்கப் போறீங்களா இயக்குநர் ரமேஷ்... ஒரு நிமிஷம்!'

|

A Letter Director Amr Ramesh S Proposed Movie On Prabha

சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பற்றியோ, ஈழப் போராட்டம் பற்றிய எடுக்கப்படும் படம் வணிகம் சார்ந்து இருக்கக் கூடாது என தமிழ் உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீரப்பன் வாழ்க்கை குறித்து வனயுத்தம் என்ற பெயரில் படமெடுத்துள்ள இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ், அடுத்து பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்து படமெடுக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

அவருக்கு முத்தமிழ் என்ற பெயரில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கடித விவரம்:

ஈழப்போராட்டத்தைப் பற்றியோ, பிரபாகரன் அவர்களை பற்றியோ, ஈழ விடுதலைப் போராட்டம் பற்றியோ, அந்த மக்களை பற்றியோ, மாவீரர்களை பற்றியோ படம் ஒன்று எடுக்கப்படுமானால் அது "Battle of Algiers" மற்றும் "Hotel Rwanda" போன்ற படங்களை போன்று இருக்கவேண்டும். வெறும் வணிகம் சார்ந்ததாக இருக்கக்கூடாது.

இயக்குநர் ரமேஷ் அவர்களே "குப்பி" படம் நானும் பார்த்தேன். ராஜிவ்காந்தி என்ற தலைவனின் கொலையை மட்டுமே மையப்படுத்தி எடுத்துள்ளீர்கள். அவர் ஏன் கொலை செய்யப்பட்டார், சர்வதேசத்தின் சதி என்ன, புவிசார் அரசியல், வணிக போட்டி, ஈழ மக்களின் விடுதலை போராட்டம், இனப்படுகொலை, பண்பாடு சிதைப்பு இவற்றைப் பற்றி இல்லாமல் மொட்டையாக ராஜீவ் கொலையை மட்டுமே மையப்படுத்தி எடுத்தது, ஈழத்தையும், அதன் போராட்டத்தையும் மழுங்கடிக்கும் செயலே அன்றி வேறென்ன?

நீங்கள் பிரபாகரன் அவர்களை பற்றியும், ஈழத்தை பற்றியும் படம் எடுக்கிறேன் என்றவுடன் மகிழ்ச்சி அடைய பலர் இருக்கலாம். ஆனால் அது உலகை, உலக மக்களை உலுக்கும் படமாகவே இருக்கவேண்டும். நீங்கள் ஈழத்தை சார்ந்து படத்தை எடுப்பது சிறுமைபடுத்தும் செயலாகவே உணர்கிறேன்.

ஈழமக்கள் நிறைய தகவல்களை சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்வது உளவியல் ரீதியாக ஈழ விடயத்தை திசை திருப்பும் செயல். ஏன் ராஜபக்சேவின் இலங்கை ராணுவம் 150000 மக்களை கொன்றுள்ளதே. அந்த இனப்படுகொலையைப் பற்றி படம் எடுக்கலாமே... தீவிரவாதம் என்ற முத்திரை குத்தப்பட்டு அந்த விடுதலைப்போராட்டம் நசுக்கப்படுள்ளதே. அதைப்பற்றி எடுக்கலாமே... போர் முடிந்து நான்கு வருடங்கள் ஆகிறது போரைவிட கொடூரமான உளவியல் போர் அந்த மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறது... அதைப்பற்றி திரைப்படம் எடுக்கலாமே...

மேதகு பிரபாகரன் அவர்களை பற்றி படம் எடுக்ககூடாது என்பதால் எங்கள் நோக்கம்...அவரைபற்றி எடுக்கவேண்டும் என்றால் 60 ஆண்டுகால ஈழ வரலாற்றை சார்ந்து எடுக்கவேண்டும். இல்லையென்றால் அது ராஜீவை மையப்படுத்தி எடுத்த 'குப்பி' போன்று குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டுவிடும்.

போராளிகளா.. தீவிரவாதிகளா?

1) முதலில் அந்த போராட்டத்தை, பிரபாகரன் அவர்களை, விடுதலை புலிகளை, மாவீரர்களை சுதந்திர போராளிகளாக காண்பிக்கப் போகிறாரா (அல்லது) உலகம் சொல்வதுபோல் தீவிரவாதிகளாக காண்பிக்கப் போகிறாரா என்பதை தெளிவுபடுத்தவேண்டும்.

2) இதுவரை சுமார் 3 இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதை, 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளதை பதிவு செய்வாரா?

3) போரின் ஒரு ஆயுதமாக குழந்தைகளை கொன்றதை, பெண்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டதை, கொடூரமாக கொல்லப்பட்டதை பதிவு செய்வாரா?

4) போரின் ஒரு ஆயுதமாக மருந்து, உணவு, அத்தியாவசிய பொருட்கள் தமிழர்களுக்கு கிடைக்காதவாறு செய்ததை பதிவு செய்வீர்களா?

5) 'தீவிரவாதிகளுக்கெதிரான போர்' என்ற பெயரில் சொந்த நாட்டு மக்கள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டதை பதிவு செய்வாரா?

6) திட்டமிட்ட போர் மூலம் தமிழ் மக்களின் மக்கள்தொகையை, பிறப்பு விகிதத்தை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சிங்கள, தமிழ் மக்களின் எண்ணிக்கையையும், தற்போதுள்ள எண்ணிக்கையையும் படத்தில் சுட்டிகாட்டுவாரா?

7) போர் முடித்து ஆண்டுகள் ஆனபின்பும் மக்களின் வாழ்வாதாரங்களை, வாழ்விடங்களை அழித்து, அவர்களை துரத்தி அவ்விடத்தில் இராணுவ முகாம்கள் அமைத்ததை பதிவு செய்வாரா?

7) கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்திய பெருங்கடலை வைத்து நடக்கும் ஆதிக்கப்போட்டியில் ஈழமும், ஈழமக்களும் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டனர் என்பதை சொல்வாரா?

8) ஆலயங்கள், பள்ளிவாசல்கள், கிருத்துவ தேவாலயங்கள் இவற்றை எல்லாம் அழித்துவிட்டு புத்த மடாலயங்களாக, புத்த தேசமாக மாற்றப்பட்டுள்ளதை, மொழி, பண்பாட்டு, கலாச்சார அழிப்பை தனது படத்தில் பதிவு செய்வாரா?

9) இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியத்தை பற்றிய காட்சிகள் அப்படத்தில் இருக்குமா?

10) தொடர்ந்து நீங்கள் தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களான படங்களை, 'குப்பி', தற்போது 'வனயுத்தம்' அடுத்து 'பிரபாகரன்' பற்றிய படங்கள் எடுப்பதன் நோக்கம் என்ன?

11) 'காற்றுக்கென்ன வேலி', 'ஆணிவேர்', 'தேன்கூடு', 'எல்லாளன்' இவற்றுக்கு கிடைக்காத ஒப்புதல் உங்கள் படத்திற்கு மட்டும் எப்படி இந்திய அரசாங்கம் அனுமதி தருகிறது?

-இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

+ comments + 2 comments

12 July 2013 at 08:55

இந்தக் கட்டுரையையையும் படிக்கச் சொல்லுங்கள் இயக்குனர் ரமேஷ் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

1,http://www.tamizl.com/?p=24311

2,http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24376:2013-07-09-16-42-29&catid=1:articles&Itemid=264

12 July 2013 at 08:56

இந்தக் கட்டுரையையையும் படிக்கச் சொல்லுங்கள் இயக்குனர் ரமேஷ் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

1,http://www.tamizl.com/?p=24311

2,http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24376:2013-07-09-16-42-29&catid=1:articles&Itemid=264

Post a Comment