சென்னை: தன் தீவிர ரசிகரின் திருமணத்துக்கு திடீர் வருகை தந்து, பரிசளித்து திக்குமுக்காட வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் சோளிங்கர் என் ரவியின் தம்பி முருகன் - ராஜலட்சுமி திருமணம் நேற்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. நேற்று முன் தினம் திருமண வரவேற்பு நடைபெற்றது.
இந்தத் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டும் என ரவி குடும்பத்தினர் ரஜினியை நேரில் அழைத்திருந்தனர்.
எனவே இந்த முறையும் ரஜினி வரமாட்டார் என்றுதான் திருமண வீட்டார் நினைத்திருந்தனர்.
ஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக, திருமண வரவேற்பு நாளன்று மாலை 7 மணிக்கு மின்னலாய் வந்தார் ரஜினி. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் விறுவிறுவென நடந்து மணமக்கள் முன் நின்றார்.
ரஜினி வந்திருக்கிறார் என்ற அதிசயம் அதன் பிறகுதான் பலருக்கும் புரிந்தது. அத்தனை பேரும் எழுந்து நின்றனர். மணமக்களும், திருமண வீட்டாரும் ஆனந்தத்தில் கண்கலங்க, அவர்களை அமைதிப்படுத்திய ரஜினி மணமக்களை ஆசீர்வதித்து, பரிசுகளும் வழங்கினார்.
பின்னர் வந்த வேகத்தில் கிளம்பிச் சென்றார். ரஜினி வந்து போன பிறகு, ரஜினியின் அண்ணன் சத்யநாராயண கெய்க்வாட், ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் உள்பட பலரும் புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினர்.
ரஜினி மன்றங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் திரளாக வந்திருந்தனர்.
Post a Comment