சென்னை: இயக்குனர் அமீருக்கும், தாலிபான்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி போலீசார் கண்காணிக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சி மாநில அலுவலக செயலாளர் குமரவேல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு இன்று சென்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
சினிமா டைரக்டர் அமீர் அளித்த ஒரு பேட்டியில் தாலிபான்கள் என்ற ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை ‘போராளிகள்' என்று கூறியுள்ளார். ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த தாலிபான்களை இப்படி கூறுவது தமிழக இளைஞர்களை அவர்களது அமைப்பில் சேருவதற்கு பிரச்சாரம் செய்வது போல் உள்ளது. கோவை குண்டு வெடிப்பால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
விஸ்வரூபம் படம் தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் முடிந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் டைரக்டர் அமீர் பேட்டி அமைந்து உள்ளது.
அவருக்கும், தாலிபான்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி போலீசார் கண்காணிக்க வேண்டும். வெளிநாடு சுற்றுப் பயணத்தின் போது அவர் தாலிபான்கள் யாரையாவது சந்தித்தாரா? என்று விசாரிக்க வேண்டும். அமீர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்து முன்னணி மாநில தலைராக இருந்து படுகொலை செய்யப்பட்ட ராஜகோபால் கொலையில் அமீருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை நடத்தி தேசவிரோத சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Post a Comment