தமிழ் சினிமா இயக்குநர்களில் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது சிலரிடம்தான். அவர்களில் செல்வராகவனும் ஒருவர்.
தமிழில் அவரது கடைசி வெற்றிப் படம் என்றால்... 7 ஜி ரெயின்போ காலனிதான்.
ஆனால் அதன் பிறகு வந்த புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் பெரிய வெற்றிப் படங்கள் என்று சொல்ல முடியாது.
ஆனால் அவரது இயக்கத்தில் அமையும் காட்சிகள், கேரக்டர்கள் பெருமளவு பேசப்பட்டன. அவரது அடுத்த படம் எப்போது வரும் என கணிசமான ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
விக்ரம், கமல் ஆகியோருடன் இணையவிருந்த செல்வராகவன், கடைசி நேரத்தில் பின்வாங்கிக் கொண்டார். சொந்தமாக இரண்டாம் உலகம் என்ற படத்தை ஆரம்பித்தார். ஆர்யாவும் அனுஷ்காவும் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில் முதல் முறையாக ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்தார் செல்வராகவன்.
படம் தொடங்கி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவ்வப்போது செய்தி வரும். பின்னர் அமைதியாகிவிடும். இதுதான் இரண்டாம் உலகத்தின் நிலை.
இப்போது செல்வராகவனே படம் குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில், படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிட்டது. விஎப்எக்ஸ் பணிகளுக்காக காத்திருக்கிறேன், என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கில் உருவாகிவரும் இந்தப் படத்தில் தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment