பொதுவாக இணை இயக்குனராக பணிபுரிந்து வருபவர்கள் டைரக்டராக ஆவது தான் வழக்கம். ஆனால் இங்கே ஒருவர் தயாரிப்பாளராகியிருக்கிறார்.. அதுவும் பிரபல இயக்குநர் ஏ ஆர் முருகதாஸிடம் பணியாற்றியவர்.. பெயர் ஏஎம் சம்பத்குமார்.
இந்தப் படத்தை இயக்குபவர் அதே ஏஆர் முருகதாசிடம் உதவியாளராக இருந்த இன்னொருவரான அன்பு ஜி. படத்தின் தலைப்பு இருவர் ஒன்றானால்!
தான் டைரக்ட் செய்யும் படத்தைக் கூட தள்ளி வைத்து விட்டு, அன்பு.ஜி-யின் கதையை கேட்ட மாத்திரத்தில் உடனே இந்த கதையை தானே தயாரிப்பது என முடிவு செய்தாராம் சம்பத்குமார். அந்த வேகத்திலேயே படப்பிடிப்பையும் முடித்து விட்டார்.
காதலை மையப்படுத்திய கதை என்பதால் புது முகங்களை அறிமுகம் செய்கிறார்கள். பல முகங்களை தேடி இறுதியாக கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகளையே தேர்வு செய்துள்ளார்கள். ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவரான பி ஆர் பிரபு நாயகனாக தேர்வானார். விஸ்காம் மாணவர் மாலினி, மாடல் தீக்ஷிதா இரு கதாநாயகிகள் அறிமுகமாகிறார்கள்.
மேலும் ஷைலேந்திரி, கார்த்திகா, ஜனனி, பிரவின், அமர் மற்றும் பல மாணவ மாணவிகள் நடித்துள்ளார்கள். இவர்களுக்கு இரண்டு மாதம் பயிற்சி கொடுத்து நடிக்க வைத்துள்ளனர்.
"வேட்டைக்காரன்"-ல் 'என் உச்சி மண்டையில சுர்ருங்குது...' என்ற பாடலை பாடிய குரு கிருஷ்ணா இப்படத்தில் இசைஅமைப்பாளராக அறிமுகமாகிறார்.
Post a Comment