சென்னை: சென்னையில் நடக்கும் இந்திய சினிமா நூற்றாண்டு விழாவையொட்டி நாளை முதல் ஒரு வாரத்துக்கு திரையுலகின் அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படுகின்றன.
வெளியூர், வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டு, நடிகர் நடிகைகள் சென்னை திரும்புகின்றனர்.
இந்திய சினிமா நூற்றாண்டு விழா வருகிற 21-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை சென்னையில் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப்முகர்ஜி பங்கேற்கிறார்.
நூற்றாண்டு விழாவையொட்டி 21-ந்தேதி மாலை 5.30 மணிக்கு தமிழ், நடிகர், நடிகைகள் கலை நிகழ்ச்சியும் 22-ந்தேதி காலை கன்னட நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 22-ந்தேதி மாலை தெலுங்கு நடிகர், நடிகையர் கலை நிகழ்ச்சியும் 23-ந்தேதி காலை மலையாள சினிமா உலகினர் கலை நிகழ்ச்சியும் நடக்கின்றன.
நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா, காஜல்அகர்வால், ஹன்சிகா, அனுஷ்கா, தமன்னா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடனம் ஆடுகின்றனர்.
நூற்றாண்டு விழாவை யொட்டி சினிமா படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நாளை முதல் 24-ந் தேதி வரை 7 நாட்கள் ரத்து செய்யப்படுகிறது. வெளியூர் படப்பிடிப்புகளில் இருக்கும் நடிகர் நடிகைகள் இன்று இரவே சென்னை திரும்புகிறார்கள்.
விழாவின் இறுதி நாளன்று மட்டும் பகலில் திரைப்படக் காட்சிகளையும் ரத்து செய்கின்றனர்.
Post a Comment