சென்னை: தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பு கிடையாது... இனி தமிழ் சினிமாவுக்கென தனி சங்கங்கள் வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா குரல் கொடுத்துள்ளார்.
ஞானக்கிறுக்கன் படத்தின் இசையை வெளியிட்ட பாரதிராஜா, பின்னர் பேசியதாவது:
சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதல் வரவில்லை என ஆர்.கே. செல்வமணி வருத்தப்பட்டார். பார்த்திபன் என்னை கவுரவித்தார்.
முதுகெலும்பு கிடையாது
தமிழ் திரையுலகுக்கு முதுகெலும்பு கிடையாது. தென்னிந்திய வர்த்தக சபை என்று இருப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பல வருடங்களாக இதை எதிர்த்து வருகிறோம்.
சினிமா இங்கு உருவாகியபோது தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் என ஆரம்பிக்கப்பட்டன. எல்லா மொழி கலைஞர்களும் அப்போது சென்னையில்தான் இருந்தார்கள்.
மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் கர்நாடகத்தில் இருக்கும் நடிகர்கள் கன்னட நடிகர் சங்கம் என உருவாக்கினார்கள். ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சங்கமும், கேரளாவில் மலையாள நடிகர்கள் சங்கமும் தோன்றின.
அநாதைகளாக..
கன்னட- தெலுங்கு திரைப்பட வர்த்தக சபைகளும் உருவாயின. ஆனால் தமிழகத்தில் மட்டும் தென்னிந்திய நடிகர் சங்கம், தென் இந்திய வர்த்தக சபை என்றே நீடிக்கிறது. அதனால்தான் சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பிதழை எதிர்பார்த்து அனாதையாக நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.
தமிழ் கலைஞர்களுக்கு தனி சங்கங்கள் இருந்திருந்தால் அழைப்பிதழ்கள் வீடு தேடி வந்து இருக்கும். நமக்கு சுய இடம், சுய அதிகாரம் வேண்டும். அப்போதுதான் உருப்படுவோம். அதற்கு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட வர்த்தக சபை உருவாக வேண்டும்.
'ஞான கிறுக்கன்' படத்தின் இயக்குனர் இளைய தேவன் என் மண்ணின் மைந்தன். என்னைப்போல் ஒப்பனை, பூச்சு எதுவும் இன்றி யதார்த்தமான கிராமத்து கதையை படமாக எடுத்துள்ளார். என் பாதையில் அவர் வருகிறார்," என்றார்.
Post a Comment