சென்னை: மதகஜராஜா படப்பிடிப்புக்கு உதவிய ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு தரவேண்டிய தொகையில் பாதிக்கு வங்கி உத்தரவாதம் கொடுத்தால் படத்தை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கே.கே.சந்தானம் தாக்கல் செய்துள்ள மனுவில், "கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவுக்கு வந்த மதகஜராஜா படக்குழுவினர், ஷூட்டிங் நடத்தத் தேவையான அனைத்து வசதிகளையும் எனது நிறுவனம் செய்து கொடுத்தது.
இதற்காக எனக்கு ஜெமினி பிலிம் சர்கியூட் நிறுவனம், ஆஸ்திரேலியா டாலர் மதிப்பில் ரூ.72 ஆயிரத்து 900 தரவேண்டும். ஆனால், இந்த தொகையை தராமல், மதகஜராஜா படத்தை வெளியிட உள்ளனர். எனவே எனக்கு தரவேண்டிய பணத்தை கொடுக்காமல், படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுதாகர், ‘மதகஜ ராஜா' படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சுதாகர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "ஆஸ்திரேலியாவில் மனுதாரர் வழங்கிய சேவைகளை பயன்படுத்திக் கொண்டு, இப்போது அதற்குரிய பணத்தை கொடுக்க முடியாது என்று ஜெமினி நிறுவனம் கூறமுடியாது. இப்போது மதகஜ ராஜா படத்தை வெளியிட ஜெமினி நிறுவனம் விரும்பினால், பணம் எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அதில் பாதி தொகைக்கு வங்கி உத்தரவாதம் கொடுக்கவேண்டும்," என்றார்.
Post a Comment