தயாரிப்பாளர் சங்கத் தலைவராக செயல்பட கேயாருக்கு தடை - ஆட்டத்தை ஆரம்பித்த தாணு அணி

|

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக செயல்பட கேயாருக்கு தடை - ஆட்டத்தை ஆரம்பித்த தாணு அணி

சென்னை: தயாரிப்பாளர் சங்கத் தலைவராக கேயார் செயல்படக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் கடந்த 7-ந்தேதி சென்னையில் நடந்தது. தலைவர் பதவிக்கு கேயார், கலைப்புலி தாணு போட்டியிட்டனர்.

இதில் தலைவராக கேயார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தலைமையிலான நிர்வாகிகள் தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பு ஏற்றனர்.

ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கலைப்புலி தாணு குற்றம் சாட்டினார். சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் விதிப்படி நடைபெறவில்லை. தேர்தல் சம்பந்தமாக விளம்பரங்கள் செய்யக்கூடாது என்று விதி உள்ளது. அதை மீறி பத்திரிகைகளில் விளம்பரங்கள் கொடுத்துள்ளனர். இது போல் சங்க விதிகள் பல மீறப்பட்டு உள்ளன. எனவே கேயார் தலைவராக செயல்பட தடை விதிக்க வேண்டும்," என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர் தயாரிப்பாளர் சங்க தலைவராக கேயார் செயல்பட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் எஸ்ஏ சந்திரசேகரன், தாணு அணி தயாரிப்பாளர் சங்கத்தில் பொறுப்பிலிருந்த போது, கேயார் அணி தொடர்ந்து வழக்குத் தொடர்ந்து அவர்களை செயல்பட விடாமல் முடக்கி வைத்ததாக குற்றச்சாட்டு இருந்தது.

இப்போது அதே ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது தாணு அணி!

 

Post a Comment