கரூர்: கரூர் மக்கள் விரும்பிக் கேட்டதால் இதயம் ஒரு கோயில் பாடலைப் பாடி நெகிழ வைத்தார் இசைஞானி இளையராஜா.
கவிஞர் சினேகன் ஹீரோவாக நடிக்க, சினேகா, ஸ்ரேயா ஹீரோயின்களாக நடிக்க, புது இயக்குநர் அமுதேஸ்வர் இயக்கும் படம் ராஜராஜ சோழனின் போர்வாள்.
இந்தப் படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.
உலக சினிமா வரலாற்றில் முதல் முறையாக மக்கள் முன்னிலையில் இந்தப் படத்துக்கு மெட்டமைக்க கரூருக்கு வந்தார் இளையராஜா. திருச்சியில் இருந்து கரூருக்கு காரில் படக்குழுவினருடன் வந்தார் அவர்.
அவர் அருள்மிகு பசுபதீஸ்வரா சன்னதி முன்பு வந்த போது, கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் இளையராஜாவை பூ போட்டு வரவேற்றனர்.
அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினர்.
பின்னர் படத்துக்காக ஒரு பாடலுக்கு மெட்டமைத்து, மக்கள் முன்னிலையிலேயே அதைப் பாடியும் காட்டினார். பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் ராஜாவிடம் ஒரு பாடல் பாடுமாறு கேட்டுக் கொண்டனர். உடனே கருவூரார் பற்றிய ஒரு பாடலை உருக்கமாகப் பாடினார்.
இதயக் கோயில் படத்தில் இடம்பெற்ற இதயம் ஒரு கோயில் பாடலைப் பாடுமாறு மீண்டும் கேட்டனர். உடனே சிரித்துக் கொண்டே, அந்தப் பாடலைப் பாட, மக்கள் கேட்டு ரசித்தனர்.
Post a Comment