தெலுங்கு சினிமா ஜாம்பவான் நாகேஸ்வரராவுக்கு புற்று நோய்!

|

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் ஜாம்பவானாகப் போற்றப்படும் ஏ நாகேஸ்வரராவ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனை அவரே சனிக்கிழமை வெளியிட்டார்.

அக்கினேனி நாகேஸ்வரராவ் தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகர். நடிகர் நாகார்ஜூனாவின் தந்தை இவர். சமீபத்தில்தான் தனது 90-வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த அவர், மருத்துவமனையில் சோதனைக்காக சென்றபோதுதான் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தெலுங்கு சினிமா ஜாம்பவான் நாகேஸ்வரராவுக்கு புற்று நோய்!

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அவசரமாக செய்தியாளர்களை சந்தித்த நாகேஸ்வரராவ், தனக்கு புற்றுநோய் இருக்கும் தகவலை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "நான் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக நான் வருந்தவில்லை. இப்போது நான் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்ந்து வருகிறேன். எனவே இந்த புற்று நோய் எனக்கு எந்த தீங்கையும் செய்யாது.

ரசிகர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகளாகிய உங்கள் ஆசீர்வாதத்தால், நான் நூறு வயதையும் கடந்து வாழ்வேன். நான் டாக்டரின் தீவிர கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலில் சிகிச்சை பெற்று வருகிறேன். ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் யாரும் என்னை சந்திக்கவோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவோ வேண்டாம்," என்றார்.

தெலுங்கு சினிமா ஜாம்பவான் நாகேஸ்வரராவுக்கு புற்று நோய்!

71 ஆண்டுகள்

நாகேஸ்வர ராவ் முதல் முதலாக நடித்த படம் தர்மபத்தினி. அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்தார். 71 ஆண்டுகளாக நடிகராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறார்.

‘இட்டாரு மித்ருடு' என்ற படத்தில் நாட்டிலேயே முதன் முதலாக இரட்டை வேடங்களில் நடித்தவர் இவர். தமிழில் சிவாஜி நடித்த நவராத்ரி படத்தை, தெலுங்கில் ‘நவராரி' என்ற பெயரில் எடுத்தபோது அதில் 9 வேடங்களில் நடித்து அசத்தினார்.

நாகேஸ்வரராவ் தனது மகன் நாகார்ஜூனா, பேரன் நாக சைதன்யா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள ‘மனம்' என்ற திரைப்படம் விரைவில் வெளியாகிறது.

இந்தியாவில் திரைப்படத்துறையில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே' விருது பெற்றுள்ள நாகேஸ்வர ராவ், தனது சிறந்த நடிப்புக்காக ‘பத்ம விபூஷண்' உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

மேலும் தேசிய அளவில் திரைப்படத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு கடந்த 2005-ம் ஆண்டு முதல் இவரது பெயரில் ‘ஏ.என்.ஆர். தேசிய விருது' வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment