சிவாஜி சிலையை அகற்றக் கூடாது- கமிஷனரிடம் இயக்குநர்கள் மனு

|

சிவாஜி சிலையை அகற்றக் கூடாது- கமிஷனரிடம் இயக்குநர்கள் மனு

சென்னை: கடற்கரை காமராஜர் சாலையில் அமைக்கப்பட்டிருக்கும் நடிகர் சிவாஜி சிலையை அகற்றக் கூடாது என தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் பெருநகர காவல் ஆணையர் ஜார்ஜை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு அளித்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.என்.ஸ்ரீநிவாசன் என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், மெரீனா கடற்கரை அருகே உள்ள காமராஜர் சாலையில் நடிகர் சிவாஜி சிலை இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு கடந்த 23 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் விசாரித்து, சிவாஜி சிலை இருப்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து பதில் அளிக்குமாறு சென்னை போக்குவரத்துப் பிரிவு போலீஸôருக்கு உத்தரவிட்டு வழக்கை புதன்கிழமைக்கு (நவ.13) ஒத்தி வைத்தனர்.

இயக்குநர்கள் சந்திப்பு...

இந்நிலையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் தலைவர் விக்ரமன், பிரபல இயக்குநர்கள் பி.வாசு,கே.எஸ்.ரவிக்குமார்,பேரரசு,ரமேஷ் கண்ணா,ரவி மரியா ஆகியோர் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜை செவ்வாய்க் கிழமை மாலை சந்தித்து நடிகர் சிவாஜி சிலையை அகற்றக் கூடாது என மனு அளித்தனர். அந்த மனுவில் 50 திரைப்பட இயக்குநர்கள் கையெழுத்திட்டிருந்தனர்.

பின்னர் இயக்குநர் பி.வாசு செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கெல்லாம், நடிப்பை கற்றுக் கொடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி. காமராஜர் சாலையில் உள்ள அவர் சிலையை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருப்பது எங்களுக்கு வருத்ததை தருகிறது. அந்த சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவிக்கிறோம். எங்களது உணர்வுகளை தெரிவிக்கும் வகையிலேயே ஆணையரை சந்தித்து மனு அளித்தோம்," என்றார்.

 

Post a Comment