டெல்லி: டெல்லி உயர் நீதிமன்றம் ராம் லீலா படத்திற்கு தடை விதிக்க மறுத்த விஷயத்தை தனக்கு யாரும் தெரிவிக்காததால் அந்த படத்திற்கு தடை விதித்து தவறு செய்துவிட்டதாக நீதிபதி ஜெயசந்திரா தெரிவித்துள்ளார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள ராம் லீலா படம் நாளை ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் படம் இந்துக்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளது என்று கூறி 6 பேர் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரா படத்திற்கு தடை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
முன்னதாக ராம் லீலா படத்திற்கு தடை விதிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்நிலையில் தான் ஜெயசந்திரா படத்திற்கு தடை விதித்தார். இதையடுத்து ஈராஸ் இன்டர்நேஷனல் மீடியாஸ் லிமிடெட்டின் சார்பில் வழக்கறிஞர் அமித் சிபல் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிபதி ஜெயசந்திராவிடம் ராம் லீலா படத்திற்கு தடை விதிக்க மறுத்துடன் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை அவர் அளித்தார்.
மேலும் படத்தின் முழுதலைப்பு ராம் லீலா: கோலியான் கி ராஸ்லீலா என்பதையும் சிபல் நீதிபதியிடம் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி தனது தடை உத்தரவை வாபஸ் பெற்றார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
ராம் லீலா படத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததை மனுதாரர்கள் என்னிடம் தெரிவிக்கவில்லை. அதனால் படத்திற்கு தடை விதித்து தவறு செய்துவிட்டேன் என்றார்.
Post a Comment