ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களை டப் செய்யக் கூடாது - கன்னட திரையுலகம் ஒருநாள் ஸ்ட்ரைக்

|

ரஜினி, கமல், விஜய், அஜீத் படங்களை டப் செய்யக் கூடாது - கன்னட திரையுலகம் ஒருநாள் ஸ்ட்ரைக்

பெங்களூர்: தமிழில் வெளியாகும் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை கன்னட மொழியில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் கன்னட திரையுலகினர்.

ஒரிஜினல் கன்னட படங்களைவிட டப்பிங் படங்கள் அதிக நாட்கள் ஓடி வசூல் குவித்து வருவது, கன்னட திரையுலகினரால் சகித்துக் கொள்ள முடியாததாக உள்ளது. எனவே பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கன்னட நடிகர், நடிகைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னட திரைப்பட வர்த்தக சபை நிர்வாகிகள் மற்றும் கன்னட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் அவசர கூட்டம் நேற்று பெங்களூரில் நடந்தது. இதில் நடிகர்கள் சிவராஜ் குமார், பாரதி, ரவிச்சந்திரன், ஸ்ரீநாத், சசிகபூர், ஜெகேஷ், ஷரண், கவுரவ்கிரன், நடிகைகள் பூஜாகாந்தி, ராதிகா பண்டிட் மற்றும் டி.வி. நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களை கன்னடத்தில் டப்பிங் செய்ய எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கோரிக்கையை வலியுறுத்தி ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுபடவும் முடிவு செய்தனர்.

இன்று ஸ்ட்ரைக்

அதன்படி இன்று கன்னட திரையுலகினர் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்புகள் நடக்கவில்லை. ஸ்டூடியோக்களும் மூடப்பட்டன. நடிகர், நடிகைகள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் மைசூர் பேங்க் சர்க்கிள் பகுதியில் இன்று காலை திரண்டனர். அங்கிருந்து மத்திய கல்லூரி மைதானத்துக்கு ஊர்வலமாக சென்றார்கள்.

அப்போது வேற்று மொழி படங்களை டப்பிங் செய்யக்கூடாது என்று கண்டன கோஷங்களை எழுப்பினர். இப்போராட்டத்துக்கு கன்னட சாகித்ய பரிஷத், கன்னட டெவலப்மென்ட் அத்தாரிட்டி, கன்னட கலாசார அமைப்புகள் போன்றவை ஆதரவு தெரிவித்து உள்ளன. கன்னட திரையுலகில் உள்ள சில சங்கங்கள் மட்டும் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

 

Post a Comment