இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி

|

சென்னை: இலங்கையில் நடக்கும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பில்லை என்று விஜய் டிவி அறிவித்துள்ளது.

விஜய் டிவியின் புகழ்பெற்ற ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை, கொழும்பில் நடத்தப்போவதாகவும், இதில் அந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற சோனியா, திவாகர் உள்ளிட்டோர் பங்கேற்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மார்ச் மாதம் ஐநாவின் மனித உரிமை அமைப்பு இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ள சூழலில், இப்படியொரு நிகழ்ச்சியில் பங்கேற்று, தமிழருக்கு எதிரான சிங்கள பரப்புரைக்கு துணை போவதா என விஜய் டிவிக்கும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் கலைஞர்களுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி

இந்த நிலையில் விஜய் டிவி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை:

"தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே இருந்திருக்கிறது விஜய் டிவி. இனிமேலும் இருக்கும்.

உலக அளவில் தமிழர்களின் பெருமையையும், திறமையையும் முன்னிறுத்துவதை தன் முதல் கடமையாக வைத்திருக்கிறது. இதனாலேயே விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலகத் தமிழர்களின் அன்பும், ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற சில உண்மைக்குப் புறம்பான செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம்.

மார்ச் 1-2 தேதிகளில் இலங்கையில் நடக்கிற இசை நிகழ்ச்சிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல, இதற்கு முன் விஜய் தொலைக்காட்சி இலங்கையில் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்தியதும் இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை.

விஜய் டிவி எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்."

-இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

Post a Comment