சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துப் பேசினார் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலருமான மு.க.அழகிரி இன்று காலை திடீரென போயஸ் தோட்டத்துக்கு வந்தார்.
தனது மகனும் தயாரிப்பாளருமான துரை தயாநிதியுடன் வந்த அவர் ரஜினியைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
இந்த தகவல் பரவியதும் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் மதிமுக பொதுச் செயலர் வைகோ, நேற்று பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார் முக அழகிரி.
தான் கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தபோதும் மதுரை மற்றும் தென்னக திமுக பிரமுகர்களை இன்னும் தொடர்பில் வைத்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் களத்தில் இன்னும் துடிப்பாகவே தன்னை வெளிப்படுத்தி வருகிறார் அழகிரி.
ரஜினியை சந்தித்துவிட்டு வெளியே வந்த மு.க. அழகிரியிடம், இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனது நீண்ட கால நண்பர். நான் அவரது ரசிகனும்கூட.
குடும்பத்தில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் அவருடன் கலந்து பேசுவது வழக்கம்.
இன்று அவரைச் சந்தித்து நலம் விசாரித்து வாழ்த்து சொல்லவே வந்தேன். என் மகன் நடிக்கும் அடுத்த படம் தொடர்பாகவும் பேசிவிட்டு, அவரது ஆசியைக் கோரினேன்.
ரஜினியின் கோச்சடையான் பட பாடல்களைக் கேட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. கவிஞர் வைரமுத்துவின் பாடலும், குறிப்பாக ரஜினி பாடிய விதமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனைச் சொல்லி, அவரிடம் பாராட்டினேன்.
அரசியல் சம்பந்தமாக நாங்கள் எதுவும் பேசவில்லை," என்றார்.
Post a Comment