சென்னை: வரும் தேர்தலில் உங்கள் ஆதரவு பாஜகவுக்கா ஆம் ஆத்மிக்கா என ரஜினியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது தொடர் விவாதமாகவே இருக்கிறது. ஏற்கனவே சில முறை சில கட்சிகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். புது கூட்டணிகள் உருவாகவும் காரணமாக இருந்தார்.
கடந்த தேர்தலில் பத்திரிகையாளர் முன்னிலையில் வாக்களித்து, தனது ஆதரவு யாருக்கு என்பதையும் காட்டினார். இப்போது அவர் அரசியல் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து வருகிறார். ஆனால் தனக்கு அரசியல் ஆசை இல்லை என்றும் ஒரேயடியாக அவர் சொல்லிவிடவில்லை.
ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவரது ரசிகர்களில் ஒரு பிரிவினரின் இப்போதும் வற்புறுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் அவர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டி காஞ்சிபுரத்தில் வேள்வி யாகம் நடத்தியது நினைவிருக்கலாம். சில மாவட்ட நிர்வாகிகள், ரகசிய கூட்டங்கள் நடத்தி, அரசியலுக்கு வரும்படி வேண்டி ரஜினிக்கு எல்லோரும் கையெழுத்திட்ட கடிதங்களை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.
இன்னொரு பக்கம் பாரதீய ஜனதா தலைவர்கள் ரஜினி ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். நரேந்திர மோடி, பொன் ராதா கிருஷ்ணன் போன்றவர்கள் அடிக்கடி ரஜினி ஆதரவு எங்களுக்குத்தான் என்று கூறி வருகின்றனர்.
இன்னொரு கட்சியான ஆம் ஆத்மி, ரஜினியின் நண்பர்களில் ஒருவர் மூலம் ரஜினி ஆதரவைப் பெற முயன்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கோச்சடையான் படத்தின் பாடல் வெளியீட்டு விழா முடிந்த பிறகு வெளியில் வந்த ரஜினியிடம், இந்த தேர்தலில் அவரது ஆதரவு குறித்து கேட்டனர் நிருபர்கள்.
பாராளுமன்ற தேர்தலில் உங்கள் ஆதரவு பாரதீய ஜனதாவுக்கா, ஆம் ஆத்மி கட்சிக்கா என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு சிரித்துக் கொண்டே, 'அரசியலே வேண்டாம்,' என்று கூறிவிட்டு காரில் ஏறிக் கிளம்பினார்.
Post a Comment