விஜய்யின் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் தமிழ் அமைப்புகள்

|

பொதுவாக ரிலீஸ் தேதி நெருங்கும் போதுதான் விஜய் படங்களுக்கு பிரச்சினை கிளம்புவது வழக்கம்.

இந்த முறை படம் தொடங்கிய சில தினங்களுக்குள்ளேயே இடியாப்பச் சிக்கலைச் சந்திக்கிறது அவரது கத்தி படம்.

விஜய் - சமந்தா நடிக்கும் இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.

படத்தை முதலில் ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது, அவர்களுடன் லைக்கா மொபைல் நிறுவனமும் தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் கத்தி படத்துக்கு எதிராக அணி திரளும் தமிழ் அமைப்புகள்

இந்த லைக்கா மொபைல் நிறுவனம் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானது. அவரிடம் ஏராளமான சலுகைகளைப் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டின் ஒரு முக்கிய நிகழ்வுக்கு ஸ்பான்சரே இந்த லைக்காமொபைல்தான். இதன் தலைவர் சுபாஷ்கரன் அல்லிராஜா ஒரு தமிழர். ஆனால் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே இவரது கூட்டாளி என்பது ஈழத் தமிழர் அறிந்த உண்மை.

இந்தப் பின்னணி கொண்ட லைக்கா மொபைல் நிறுவனம் விஜய் படத்தைத் தயாரிப்பது தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

எக்காரணம் கொண்டும் விஜய் நடிக்கும் இந்த கத்தி திரைப்படத்தை உலகின் எந்தப் பகுதியிலும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என அமெரிக்க தமிழ் அமைப்புகள் உறுதியாகத் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய தமிழ் அமைப்புகளும் இதே நிலைப்பாட்டை எடுத்துள்ளன.

இந்தப் பிரச்சினை தீர இரண்டு வழிகள்தான் உள்ளதென்றும்,
ஒன்று படத்தைக் கைவிட வேண்டும்... அல்லது தயாரிப்பாளரை மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்துக்கு எழுந்துள்ள இந்த பிரச்சினை குறித்து சில தமிழ் தினசரிகளின் செய்தியாளர்களை மட்டும் ரகசியமாக அழைத்து சந்தித்துள்ளனர் இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர்.

இதில் காமெடி என்னவென்றால், இந்த பிரச்சினையை அம்பலத்துக்கு கொண்டுவந்ததே ஒன்இந்தியா உள்ளிட்ட இணையதளங்கள்தான். ஆனால் படக்குழு விளக்கம் தருவதோ, இதைப் பற்றி எதுவுமே எழுதாத செய்தித் தாள்களிடம்...!

 

Post a Comment