டெல்லி: டெல்லியிலிருந்து சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வந்த நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், சக பயணி ஒருவருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டு விட்டது. இந்த மோதல் கைகலப்பாகி இருவரும் ஒருவரை ஒருவர் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்து அடிக்கப் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உள்ளே புகுந்து இருவரையும் விலக்கி விட்டு அமைதிப்படுத்தியதால் மோதல் தவிர்க்கப்பட்டது.
படப்பிடிப்புக்காக விமானம் மூலம் டெல்லி வந்தார் பிரகாஷ் ராஜ். படப்பிடிப்பு முடிந்ததும் சென்னை திரும்புவதற்காக விமான நிலையம் வந்திருந்தார். ஏர் இந்தியா நிறுவன கவுண்டரில் பயணிகளோடு பயணியாக வரிசையில் நின்றிருந்தார்.
அப்போது அவருக்குப் பின்னால் இருந்த ஒரு பயணி, பிரகாஷ் ராஜ் மீது விழுந்துள்ளார். இதில் பிரகாஷ் கீழே விழப் பார்த்தார். சுதாரித்து சமாளித்து நின்ற அவர் கோபத்துடன் அவரிடம் சரியாக நிற்க முடியாதா என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த பயணி ஏதோ சொல்ல கோபமாகிப் போன பிரகாஷ் ராஜ் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அந்த பயணி பிரகாஷ் ராஜிடம் கடுமையாகப் பேசியுள்ளார். பதிலுக்கு பிரகாஷ் ராஜும் சத்தம் போட்டுள்ளார். இது ஒரு கட்டத்தில் கடுமையான சண்டையாக மாறியது. பிரகாஷ் ராஜ் கோபத்தில் அந்த பயணியின் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துள்ளார். அவரும் பிரகாஷ் சட்டைக் காலரைப் பிடிக்க அங்கு ரசாபாசமான சூழல் ஏற்பட்டது.
இருவரும் அடித்துக் கொள்ளும் நிலை ஏற்படவே அங்கிருந்தவர்கள் இருவரையும் கஷ்டப்பட்டு விலக்கி விட்டு அமைதிப்படுத்தினர். இந்த திடீர் சண்டையால் அங்கு சலசலப்பு ஏற்பட்டு விட்டது.
ஏன் இந்த சண்டை தீவிரமானது என்பது தெரியவில்லை.!
Post a Comment