சென்னை: தனது பிறந்த நாளான இன்று ரசிகர் நற்பணி மன்றத்தைத் தொடங்கினார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.
ரசிகர் மன்றம் சார்பில் முதல் நிகழ்ச்சியாக அவரது பிறந்த நாள் இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சென்னை மாவட்ட ரசிகர் மன்றத்தின் மூலம் இந்த நிகழ்ச்சி நடந்தது.
இந்த விழாவில் ஜிவி பிரகாஷ் கலந்துகொண்டு ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டார்.
விழாவில் 10 கிலோ கேக் வெட்டப்பட்டது. ரசிகர்கள் அவருக்கு ஆளுயர மாலை, தலைக்கிரீடம் , வெள்ளி வாள் மற்றும் பரிசு பொருட்களை கொடுத்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பிறந்தநாளை முன்னிட்டு சென்னை திருவான்மியூரில் உள்ள காக்கும் கரங்கள் சிறுவர்கள் காப்பகத்திற்கும், சென்னை ஓட்டேரியில் உள்ள ஆஷா நிவாஸ் பாய்ஸ் ஷெல்டர் ஹோமிற்கும் இரவு உணவு சென்னை மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரசிகர் நற்பணி மன்றத்தை பற்றி ஜிவி பிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
என்னுடைய ரசிகர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் என பரவி கிடக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் ஒரு அமைப்பாக மாற்றவே இந்த நற்பணி மன்றம் துவக்கினேன்.
இந்தியாவின் மிகப்பெரிய சக்தி இளைஞர் சக்தி என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்த சின்ன வயதில், எனக்கான பேர், புகழ் எல்லாவற்றையும் கொடுத்தது இந்த தமிழ் சமூகம். அதுக்கு நான் என்னால முடிந்ததை திருப்பி கொடுக்கணும்னு நினைக்கிறேன்.
ரசிகர் மன்றம்னு சொன்னாலே இங்க தப்பா பார்க்கப்படுது. நிச்சயமா நம்மை நேசிக்கின்ற இளைஞர்களை வைத்து இங்கு ஆக்கப் பூர்வமான செயல்களைச் செய்ய முடியும். அதற்கு உதரணமா கமல் சார் மற்றும் சூர்யா சார் நற்பணி மன்றங்கள் இருக்கின்றன. அவர்களின் பாதையில் தான் நானும் பயணிக்க விரும்புகிறேன்.
புதிய மன்றம் தொடங்க 9003687202 என்ற எண்ணிலோ gvpfansclub@gmail.com என்ற மின் அஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம்.
-இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment