ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பிஸியோ தெரபி முகாம்: சூர்யா முயற்சி

|

ஸ்டண்ட் நடிகர்கள் தினம் தினம் உயிரைப்பணயம் வைத்து ஆபத்தான காட்சிகளில் நடிக்கிறார்கள். ஒருமுறை அடிபட்டால், திரும்ப படப்பிடிப்புக்கு வர ஆறு மாதங்கள் ஆகிறது. அதுவரை அவர்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே, ஸ்டண்ட் நடிகர்களுக்காக ‘பிசியோதெரபி' முகாம் அமைப்பது பற்றி யோசித்து வருகிறேன் என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.

ஸ்டண்ட் கலைஞர்களுக்கு பிஸியோ தெரபி முகாம்: சூர்யா முயற்சி

சூர்யா-சமந்தா ஜோடியாக நடித்து, லிங்குசாமி டைரக்டு செய்திருக்கும் படம், 'அஞ்சான்'. இந்த படத்தை, திருப்பதி பிரதர்ஸ், யு.டி.வி. ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள படத்தின் ‘டீஸர்' சமீபத்தில் வெளியானது. அதை 2 நாட்களில், 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் ‘யூ டியூப்'பில் பார்த்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக நடிகர் சூர்யா செய்தியாளர்களிடம் கூறும்போது, ''நான் நடிக்கிற எல்லா படங்களும் கணவன், மனைவி, குழந்தைகள் என குடும்பத்துடன் பார்க்கும்படி அமைகின்றன. முகம் சுளிக்கிற மாதிரி காட்சிகள் வருவதில்லை. இதற்காக, என்னை வைத்து படங்களை இயக்கும் டைரக்டர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் என் கருத்துக்களை டைரக்டர்களிடம் திணிப்பதில்லை. அதுவாகவே நடக்கிறது என்றார்.

ஜாலி சூட்டிங்

அஞ்சான் படத்திற்காக 6 மாச ஷூட்டிங் போனதே தெரியலை. அவ்ளோ ஜாலியா ரகளையா இருந்துச்சு. ஃபிரண்ட்ஸ் கூட பிக்னிக் போன மாதிரி ரொம்பவே அனுபவிச்சு வேலை பார்த்தோம்.

புது லிங்குசாமி

லிங்குசாமி படத்துக்கு படம் புதுமையைக் கொடுப்பார். அஞ்சான் படத்தின் ‘ஸ்டைல் ஆஃப் மேக்கிங்ல இதுவரைக்கும் பாக்காத புது லிங்குசாமி சாரை நீங்க பாக்கலாம்.

ரசிகர்களை ரசிக்க வைப்பான்

தியேட்டருக்கு வர்ற ரசிகர்களை ‘அஞ்சான்' நிச்சயம் ஏமாத்தமாட்டான். என் வெற்றிப் பட வரிசையில் இவனுக்கு முக்கிய இடம் உண்டு.

இரட்டை வேடத்தில்

அஞ்சான்' படத்தில் கிருஷ்ணா, ராஜுபாய் என இரு வேடங்களில் நடித்து இருக்கிறேன். கதைக்களம் மும்பை என்பதால் முழுக்க முழுக்க மும்பையிலேயே எடுத்த படம் இது.

டுவிட்டர், ஃபேஸ்புக்

ரசிகர்களுடன் நேரடி தொடர்பு வைத்துக் கொள்வதில், நான் ஆர்வமாக இருக்கிறேன். டுவிட்டர், ஃபேஸ்புக்கில் எழுத நேரமில்லை. ஏதோ வந்தோம், பகிர்ந்தோம் என்று இருந்துவிடக் கூடாது. எங்கிருந்தாலும் உடனுக்குடன் சரியான தகவலை பகிர்ந்து கொள்ளும் சூழல் இருக்க வேண்டும். அதற்காக ஒரு சிறிய டீமை தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன். விரைவில் இறங்குவேன்.

விளம்பரப்படங்களால் மதிப்பு

ஒரு பிராண்டுக்கு விளம்பரம் செய்யும்போது கூடுதல் வருமானத்துடன் ஒரு மரியாதையும் கிடைக்கிறது. அதை ஒரு வித மதிப்பான விஷயம் என்று நினைக்கிறேன்.

பயிற்சிப் பள்ளி

பள்ளி, கல்லூரி களுக்கு போகாமல் படிப்பை துண்டித்துக்கொள்கிற பிள்ளைகளுக்கு அவர்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் பயிற்சி அளிக்க புதிய திட்டம் தொடங்குவது பற்றி யோசித்து வருகிறேன்.

கவனிக்க நேரமில்லை

குழந்தைகளை இப்போ ‘ஜோ' தான் கவனிச்சிக்கிறாங்க. முடிந்த வரை சனி, ஞாயிறுகளில் நேரம் ஒதுக்க முயற்சி செய்கிறேன். கடந்த 4, 5 ஆண்டுகளாக அது நடக்க வில்லை. குழந்தைகளோட பத்து வயது வரைக்கும் அவர்களுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இனி அது நடக்கும்.

தெலுங்குப் படத்தில்

தெலுங்கு ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எனக்கு கிடைத்திருக்கிறது. ‘ஏன் இங்கு ஒரு படம் பண்ணக்கூடாது?' என்று நிறைய பேர் கேட்கவும் செய்றாங்க. இப்போ அதுக்கான வேலைகளில் இருக்கிறேன்.

அம்மாவுக்கு வீடு

அம்மாவுக்காக பிரம்மாண்ட வீடு கட்டும் வேலைகள் நடந்து வருது.இன்னும் நிறைய செலவு இருக்கு. அதை பொறுமையாக செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார் சூர்யா.

 

Post a Comment