அடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்!- இளையராஜா

|

ரசிகர்கள் இணையதளங்கள் மூலம் தரவிறக்கம் செய்யாமல், நேரடியாக வாங்கி கேட்கும் நிலை உருவானால், வாரம் ஒரு புதிய ஆல்பம் கூட வெளியிட நான் தயார் என்று இசைஞானி இளையராஜா கூறினார்.

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் உள்ள இளையராஜாவின் வீட்டில், இசைஞானி ஃபேன்ஸ் கிளப் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்குக்கு இளையராஜா தலைமை வகித்தார். திரைப்பட நடிகர் ராஜேஷ், இயக்குநர்கள் ரத்னகுமார், சுகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் ரசிகர்களுக்கிடையே இளையராஜா பேசியது:

ரசிகர்களுடனான முதல் சந்திப்பை நான் இங்கு வைத்துகொண்டதுக்கு காரணம், எனது தாயார் மற்றும் மனைவியின் நினைவிடங்கள் இங்குதான் உள்ளன.

தீபாவளியன்று அம்மா நினைவு நாள் என்பதால் ஆண்டுக்கு ஒரு முறை இங்கு வருவேன். தாயாரின் சமாதியில் அஞ்சலி செலுத்துவேன். தற்போது ரசிகர்களான உங்களை சந்திக்க வந்துள்ளேன்.

அடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்!- இளையராஜா

இத்தனை நாட்களாக, என் பெயரில் என் அனுமதி இல்லாமலேயே நீங்கள் பல ரசிகர் மன்றங்களை ஆரம்பித்திருந்து, ஆளாளுக்கு என்னைப் பந்தாடிக் கொண்டிருந்தீர்கள். எந்த உரிமையில் இப்படிச் செய்து வந்தீர்கள்?

இதையெல்லாம் மாற்றி, உங்கள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரத்தான் இந்த ஏற்பாடு.

ஆளாளுக்கு ரசிகர் மன்றம் தொடங்குவதில் என்ன நோக்கம் இருக்கிறது? அந்தக் காலத்தில் திண்ணைப் பேச்சு பேசுவார்களே.. அப்படித்தான் தனித்தனி குழுக்களாக இயங்குவது.

இதையெல்லாம் கவனித்து வந்த ரத்னகுமாரும், வேலுச்சாமியும், ஆல்பர்ட் போன்றவர்களும், நமது சக்தி விரயமாகிறதே என்று உணர்ந்து இந்த அமைப்பை ஆரம்பித்தார்கள், என் அனுமதியுடன்.

இந்த அமைப்பைக் கொண்டு எல்லோரும் இணைந்து உலகத்துக்கு நல்ல விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

அடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்!- இளையராஜா

இங்கு கூடிய இசைஞானி பேன்ஸ் கிளப் கூட்டத்தின் நோக்கம் இசையை வளர்ப்பது, ஆன்மீகத்தை காப்பது, சமூக சேவைகளை மக்களுக்கு செய்வது, மரக்கன்றுகள் நடுவதோடு, பொதுச் சேவையோடு, நாட்டை சுத்தமாக வைப்பதோடு, மனதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள், எனது பெயரில் என் அனுமதி இல்லாமல் இயங்கக்கூடிய ஆயிரக்கணக்கான ரசிகர் மன்றங்கள், இசைஞானி பேன்ஸ் கிளப் என்ற அமைப்பில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இங்கு பேசியவர்கள், ஹவ் டு நேம் இட் போல புதிய ஆல்பம் ஏன் வெளியிடவில்லை என்று கேட்டார்கள். இங்கே ஆன்லைனில் மட்டும் 20 லட்சம் பேர் ரசிகர்கள் இருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா... நீங்கள் மட்டும் எனது பாடல்களை இணையதளத்தில் பதிவு இறக்கம் செய்யக்கூடாதென உறுதி மொழி எடுங்கள். புதிய ஆல்பத்தை சிடியாக வாங்கி கேட்பதென உறுதிஎடுத்து பதிவு செய்யுங்கள்... அடுத்தநாளே ஒரு ஆல்பம் வெளியிட என்னால் முடியும். அது எனக்கு ஒரு பெரிய விஷயமே அல்ல. இசை ஆல்பங்களை வாங்கிக் கேட்க ரசிகர்கள் தயாராக இருந்தால் வாரம் ஒரு ஆல்பம் வெளியிட என்னால் முடியும்," என்றார்.

மேலும், அடுத்தடுத்து, தன் லோயர்கேம்ப் வீட்டில் ரசிகர்களைச் சந்திக்க உள்ளதாகவும் இளையராஜா தெரிவித்தார்.

வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் காலை மற்றும் பிற்பகல் உணவு வழங்கப்பட்டது.

வந்திருந்த ரசிகர்கள் லோயர் கேம்ப் இல்லத்தின் வளாகத்தில் அமைந்துள்ள இளையராஜாவின் அன்னை மற்றும் துணைவியார் நினைவிடங்களில் தங்கள் அஞ்சலியைச் செலுத்தினர்.

இந்தக் கருத்தரங்கில், திரைப்பட தயாரிப்பாளர் டாக்டர் ஆல்பர்ட், ரேணுகா மில் மோகன், மற்றும் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரசிகர்கள் மட்டும் கருத்தரங்கில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இதுவரை இயங்கிவந்த பல ரசிகர் மன்ற குழுக்கள் இசைஞானி பேன்ஸ் கிளப்பில் இணைக்கப்பட்டன.

அடுத்த வாரமேகூட புது ஆல்பம் தயார்... ஆனால்!- இளையராஜா

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய தேனிகண்ணன், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

 

Post a Comment