குவஹாத்தி/இம்பால்: நூறு கோடி ரூபாயைத் தாண்டி பிரம்மாண்ட பட்ஜெட் படங்களை இந்தியாவின் பாலிவுட்டும் கோலிவுட்டும் தயாரிக்க ரூ1 கோடியை கூட எட்டாமலே அஸ்ஸாமிய சினிமாவும் ரூ10 லட்சத்தைத் தொடாமலே மணிப்பூர் சினிமாவும் உருவாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தியாவின் வடகிழக்கில் உள்ள 8 மாநிலங்களில் அதாவது அஸ்ஸாம், அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், மேகாலயா, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள்தான் சினிமாவின் தாக்கத்தை எதிர்கொள்ளாதவகைகளாக இருக்கின்றன.
அஸ்ஸாம்- மணிப்பூர் சினிமா
ஒட்டுமொத்த இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியத்தில் அஸ்ஸாமிய சினிமாவும் மணிப்பூரி சினிமாவும்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் நம்ம தமிழ் சினிமாவைப் போல நூற்றுக் கணக்கில் வெளியாகி நூற்றுக்கணக்கில் வெளியாகாமல் முடங்கிக் கிடக்கும் கதையெல்லாம் இங்கு இல்லை.
ஆண்டுக்கு 20 படம்
அஸ்ஸாமிய சினிமா உலகம் என்பது ஆண்டுக்கு அதிகபட்சம் 20 படங்களை வெளியிடுகிறது.
அதிக பட்ஜெட் ரூ80 லட்சம்
அஸ்ஸாமிய சினிம உலகத்தின் மிக அதிகமான பட்ஜெட் என்பது ரூ70 லட்சம் முதல் ரூ80 லட்சம் வரை. இது பாலிவுட் படத்தில் கதாநாயகியின் காஸ்ட்யூமுக்கான செலவை விட குறைவுதான்.
70 படங்கள்
அதே நேரத்தில் மணிப்பூர் சினிமாவோ ஆண்டுக்கு 60 முதல் 70 படங்களை வெளியிடுகிறது.
ரூ7 முதல் ரூ8 லட்சம்
ஆனால் மணிப்பூர் சினிமாவின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா? ரூ7 லட்சம் முதல் ரூ8 லட்சம்தான் வரை.
லாபம் இல்லையே
இப்படி சிக்கனத்தில் படமெடுத்தாலும் சினிமா வர்த்தகம் என்பது செழிப்புக்குரியதாக இல்லை என்பது அந்த மண்ணின் திரை உலகக் கலைஞர்களின் கவலை. அங்கெல்லாம் நம்ம ஊர்களைப் போல பிரம்மாண்ட திரையரங்குகள் இல்லை என்பதுதான் முதன்மை பிரச்சனை. அந்த பிராந்திய முழுவதுமே மொத்தமே 70 திரையரங்குகளே அதிகம்.
இப்படித்தான் திரையிடல்
பொதுவாக சமூகநலக் கூடங்களை படத்தை திரையிட பயன்படுத்துகின்றனர். இன்னும் சிலர் கிராமங்களுக்கு போய் படத்தைத் திரையிட்டுக் காண்பிக்கிற நிலையும் இருக்கிறது.
மகா கலைஞர்கள்
ஆனாலும் அவ்வப்போது தேசிய விருதுகளை தட்டிவிட்டுச் செல்கிற மகா கலைஞர்களும் அம்மண்ணில் இருக்கிறார்கள். அவர்களது கவலையெல்லாம் சினிமாவிற்கான பயிற்சி நிறுவனங்கள் வடகிழக்கு பிராந்தியத்தில் அதிகம் கொண்டுவரப்பட வேண்டும்; சினிமாக்களை திரையிடுவதற்கான அரங்குகள்; சினிமாவுக்கான நிதி உதவிகள் தேவை என்பதாக இருக்கிறது.
கண்டுகொள்ளுமா அரசு
அவர்களும் பாலிவுட் போல, கோலிவுட் போல அல்லாது போனாலும் "இந்திய சினிமா" என்கிற நீரோட்டத்துக்குள் இணைகிற அளவாவது மத்திய அரசு அப்பிராந்தியத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே அந்த மண்ணின் கலைஞர்களின் ஆதங்கம்.
Post a Comment