சென்னை: தமிழக முதல்வரை அவமதித்த இலங்கையின் துணைத் தூதரகத்தை இழுத்து மூடக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இன்று நடத்தும் போராட்டத்தில் பெப்சி அமைப்பும் இணைந்தது.
இன்று காலை பத்து மணிக்கு இலங்கை தூதரகத்தின் முன்பாக நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரையுலகின் அனைத்து சங்கங்களுமே பங்கேற்கின்றன. இதனை ஒவ்வொரு சங்கமும் உறுதிப்படுத்தியுள்ளன.
பெப்சி அமைப்பின் தலைவர் இயக்குநர் அமீர் மற்றும் செயலர் ஜி சிவா ஆகியோர் விடுத்துள்ள அறிவிப்பில், இந்த போராட்டத்தில் பெப்சி அமைப்பும் கலந்து கொள்கிறது என்று தெரிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் நடிகைகள், அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்கின்றனர். திரளாகப் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழர்களின் உணர்வுகளைப் புறக்கணிப்பதோடு, நமது மாண்புமிகு முதல்வரையும் அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ளும் இலங்கையின் ஒட்டு வாலாக விளங்கும் இலங்கை துணைத் தூதரகம் தமிழகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கோஷங்களுடன், இலங்கை தூதரகம் முன்பு திரையுலகினர் குவிந்து வருகின்றனர்.
போராட்டம் நடக்கும் இடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Post a Comment