திருப்பூர்: திருப்பூரில் பூஜை படத்தின் திருட்டு விசிடியை விற்பனை செய்த கடையில் சோதனை செய்த நடிகர் விஷால் அங்கிருந்த பூஜை, கத்தி படங்களில் விசிடிகளை பறிமுதல் செய்ததோடு, அவர்களை போலீசில் ஒப்படைத்தார்.
சினிமாவில் நடித்தோமா சம்பளம் வாங்கினோமா, ரிலீஸ் முடிந்த உடன் டூர் கிளம்பினோமா என்றில்லாம் இப்போது நடிகர்களே திருட்டு விசிடி ரெய்டுக்கு கிளம்பிவிடுகின்றனர்.
பார்த்திபன், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் தாங்களே கடை வீதிகளில் இறங்கி திருட்டு விசிடியை ஒழிக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
தீபாவளி நாளில் விஷால் நடிப்பில் வெளியாகியிருக்கும் பூஜை படத்தின் திருட்டு விசிடிக்கள் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருப்பதாக அவரது வெளியூர் ரசிகர்கள் தகவல் கொடுத்தனர்.
இதன் பேரில், சமீபத்தில் கோவை, திருப்பூர் உள்பட பல ஊர்களுக்கு தியேட்டர் விசிட் சென்ற விஷால், அங்கு கடை கடையாக ஏறி இறங்கியிருக்கிறார்.
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதிகளில் சில கடைகளில் பூஜை படத்தின் திருட்டு விசிடிக்கள் இருப்பதை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்ததோடு விற்பனை செய்த நபர்களை போலீஸ் வசம் ஒப்படைத்தார் விஷால்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், புதுப்படங்களில் போஸ்டர்களை போட்டே இப்போது திருட்டு விசிடி விற்பனை செய்கின்றனர் என்றார்.
விஷாலின் இந்த திடீர் ரெய்டு காரணமாக, பல ஏரியாக்களில் விற்பனைக்கு வந்திருந்த ஏராளமான புதிய படங்களின் திருட்டு விசிடிக்களை வியாபாரிகள் பதுக்கி விட்டார்களாம்.
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படம் வெளியானபோது, சென்னையிலுள்ள பிரபலமான கடை வீதிகளில் இறங்கி திருட்டு விசிடி விற்பனை செய்தவர்களை கையும் களவுமாக போலீஸ் வசம் பிடித்துக் கொடுத்தார் பார்த்திபன்.
அதேபோல், காரைக்குடிக்கு படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் அங்குள்ள லோக்கல் சேனலில் புதிய படங்கள் ஒளிபரப்பாவதைக்கண்டு நடிகர் விஷால், நேரடியாக சென்று அவர்களை போலீசில் பிடித்துக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment