காட்டு மல்லி, நகர்ப்புறம் படங்களுக்கு நான் கொடுத்த தேதிகளை வீணடித்துவிட்டனர் என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா.
ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘காக்கிசட்டை', ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைத்துரை, அதர்வாவுடன் ஈட்டி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் ஏற்கனவே காட்டுமல்லி, நகர்புறம் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு சில ஆயிரங்கள்தான் சம்பளம். இப்போது அரை கோடியை நெருங்கிவிட்டது அவர் சம்பளம்.
இந்த நேரத்தில் மீண்டும் அந்த பழைய படங்களில் நடிக்க அழைக்கின்றனர். ஆனால் நடிக்க தேதிகள் ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டார் ஸ்ரீதிவ்யா.
இதனால் ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியுள்ளனர் சம்பந்தப்பட்ட இரு படங்களின் தயாரிப்பாளர்களும்.
தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீதிவ்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் எல்லா படங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை.
காட்டுமல்லி படத்தில் நடிக்க இரண்டு வருடங்களுக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். ஆனால் அதன் படப்பிடிப்பு திடீரென நின்று போனது.
படப்பிடிப்பு குழுவினரிடையே நடந்த குழப்பங்களால் படவேலைகள் தொடர்ந்து நடக்கவில்லை. அதன்பிறகு தயாரிப்பாளர்களிடம் இருந்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை.
அதனால் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடிக்க போய்விட்டேன். ‘காட்டுமல்லி' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்குமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. கொடுத்த கால்ஷீட்டையும வீணடித்துவிட்டு இப்போது வந்து நின்றால் நான் என்ன செய்வது?," என்றார்.
Post a Comment