சென்னை: நீங்கள் எதற்கெல்லாம் "ஆ" என்று அலறுவீர்கள்? கரப்பான் பூச்சியைப் பார்த்தால், பல்லியைப் பார்த்தால் ஏன் பேயைப் பார்த்தாலும்தான்.
அப்படித்தான், தன்னுடைய புதிய திகில் திரைப்படத்திற்கு "ஆ" என்றே பெயர் வைத்துள்ளனர் "அம்புலி" படத்தின் இயக்குனர்களான ஹரி-ஹரேஷ் இரட்டையர்.
நள்ளிரவும் "ஆ" என்ற அலறலும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை. நள்ளிரவு 12 மணியும், "ஆ" என்றஅலறலும் ரசிகர்களை உச்ச கட்டத்தில் பயமுறுத்தும் கூட்டணியாகும்.
"ஆ என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும். இந்த வார்த்தையைவிட பலமாக பயம் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை தமிழ் மொழியில் கிடையேவே கிடையாது. அதனால்தான் இதனையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறோம்" என்கின்றனர் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரேஷ்.
ஆவியுலகை பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் உலகமெங்கும் சுற்றி வரும்போது, அவர்களுக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவம்தான் இந்த "ஆ". ஐந்து வித்தியாசமான தளங்களில் நடக்கும் திகில் கதை இது.
ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஒரு ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை, வங்க கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஏடிஎம் ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்த ஆ திரைப்படம்.
இப்படத்தில் "அம்புலி" கணேஷ், சிம்ஹா, மேஹ்னா, பாலா, எம் எஸ் பாஸ்கர், பாஸ்கி மற்றும் பலர் இதில் நடித்திருக்கிறார்கள்.
இப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்களையே மிகவும் திகிலுடன் இரவு 12 மணிக்கு வெளியிட்டு பட்டையைக் கிளப்பினர் படக்குழுவினர்.
Post a Comment