சென்னை : சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள கங்காரு படத்திற்கு சென்சார் போர்டு கிளீன் யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
மிருகம், உயிர் மற்றும் சிந்து சமவெளி என தன் முந்தைய படங்கள் மூலம் சர்ச்சை இயக்குநர் என்ற பட்டத்தைப் பெற்றிருந்தார் இயக்குநர் சாமி. எனவே, அவரது புதிய படமான கங்காருவும் அதே போன்ற படமாகத் தான் இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், தற்போது இப்படத்திற்கு சென்சார் போர்டு யு சான்றிதழ் வழங்கியுள்ளதன் மூலம், இப்படம் பாச உணர்வை பறை சாற்றும் படம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அர்ஜுனா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, ஆர்.சுந்தர்ராஜன், தம்பிராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்த தனது பேட்டிகளில், ‘தனது முந்தைய படங்களைப் பார்த்து தனது தாயாரே திட்டி இருப்பதாகவும், இனியாவது ஒழுங்காக நல்ல மாதிரியாக படம் பண்ணு என அவர் அறிவுரை கூறியிருப்பதாகவும் சாமி தெரிவித்திருந்தார்.
மேலும், 'கங்காரு' என் அம்மாவே பாராட்டும்படி இருக்கும். இது வரையிலான சாமியின் பிம்பத்தை இப்படம் நிச்சயம் உடைக்கும்' என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.
அதனை உறுதி செய்யும் விதமாக, படம் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் 'கங்காரு' படத்திற்கு கிளீன் ‘யு' சான்றிதழ் வழங்கியுள்ளனர். அழுத்தமான கதையில் பல இடங்களில் கண்ணீரையும் வரவைக்கிறார் என்று அவர்கள் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment