அருள்மொழி வர்மன், ஆழ்வார்க்கடியான்.. இந்த கேரக்டர்கள் எல்லாம் கல்கியின் அழியாத உருவங்கள். பொன்னியின் செல்வன் மாதிரியான ஒரு படைப்பை இனிமேல் யாராலும் எழுதவே முடியாது. நம்மை பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னால் கொண்டு சென்று, நம்மை இந்த கேரக்டர்களுடன் பயணிக்க வைப்பார் கல்கி.
அனிமேஷனில் வெளியான கோச்சடையான் படம், பல புதிய முயற்சிகளுக்கு வழி வகுத்திருக்கிறது என்றால் மிகையல்ல.
கோச்சடையானுக்குப் பின் பல புராண, வரலாற்றுக் கதைகளை முழு நீள திரைப்படமாக்கும் முயற்சிகள் அதிகரித்துள்ளன. அவற்றுக்கு தாராள நிதியுதவியும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது எம்ஜிஆர், ரஜினி, கமல் என பலரும் நடிக்க முயன்று முடியாமல் போன வரலாற்று நாவலான கல்கியின் 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் வடிவில் படமாகிறது.
2 டி அனிமேஷனில் தயாராகும் இப்படம் இரண்டரை மணி நேரம் ஓடக்கூடியதாகும்.
'பைவ் எலிமெண்ட்ஸ்' என்ற நிறுவனம் சார்பில் படத்தைத் தயாரிப்பவர் பொ. சரவணராஜா.
இத்தனை நாவல்கள் இருக்கும் போது குறிப்பாக பொன்னியின் செல்வனை படமாக்கக் காரணம் என்ன?
''பொன்னியின் செல்வனுக்கு அவ்வளவு வாசகர்கள், ரசிகர்கள் இருக்கிறார்கள். . தனிப்பட்ட முறையில் எனக்கு அந்நாவல் பிடிக்கும். 2500 பக்கங்கள் கொண்டது என்றாலும் நானே ஐந்து முறை படித்துள்ளேன். அவ்வளவு அற்புதமான படைப்பு அது. எனவே அதை எடுத்துக் கொண்டேன். இவ்வளவு புகழ் பெற்ற அந்தப் படைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிதான் 'பொன்னியின் செல்வன்' அனிமேஷன் திரைப்படம்.
இன்றைய வணிகமய, உலகமயச் சூழலில் வரலாற்றுப் படைப்புகள் ரசிக்கப்படுமா என்று சிலர் கேட்கிறார்கள் சொல்கிற விதத்தில் சொன்னால் ரசிக்கவே செய்வார்கள்.
'பொன்னியின் செல்வன் கதையின் கருத்தும் கரையாமல் ,நோக்கும் போக்கும் நோகாமல் ,தகவல்கள் தடுமாறாமல் அதே சமயம் சுவாரஸ்யம் குன்றாமல் சுருக்கியும் உருவாக்க இருக்கிறோம்.
அனிமேஷனாக உருவாக்கும் போது அதன் எல்லையும் சுதந்திரமும் பரந்தது. தொழில்நுட்ப சாத்தியங்களில் சிறப்பு சேர்க்க முடியும். படத்தின் அனிமேஷன் இயக்குநர் மு.கார்த்திகேயன் .இவர் இத்துறையில் இருபது ஆண்டுகள் அனுபவம் பெற்றிருப்பவர். இம்முயற்சியில் திரைப்பட ஊடக நண்பர்களும் பின்னணியில் இருக்கிறார்கள். அவர்களின் பக்கபலம் திரைவடிவ முயற்சிக்கு பெரிதும் துணை நிற்கும்.
படத்திற்கான இசை, வசனம் போன்றவற்றிற்கு மட்டுமல்ல பின்னணிக் குரலுக்கும் கூட பிரபலமானவர்களை- தமிழ் திரை நட்சத்திரங்களை அணுக இருக்கிறோம்," என்றார் சரவணராஜா.
Post a Comment