சென்னை: லிங்கா படத்தின் லாப நஷ்டம் குறித்து அதன் தயாரிப்பாளர்களிடம்தான் பேச வேண்டுமே தவிர, உடல் உழைப்பைத் தந்து படத்தை முடித்துக் கொடுத்துவிட்ட ரஜினியிடம் விவாதிக்க முயற்சிப்பது தவறு, என்று நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நடிகர் சங்கத் தலைவர் ஆர் சரத்குமார், செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
லிங்கா பட வசூல் குறைவாக உள்ளதாகக் கூறி, அதை ஈடு செய்திட நடிகர் ரஜினிகாந்த் தலையிடவேண்டும் என்று கூறி சில விநியோகஸ்தர்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதும் வசூல் குறைவதும் ரசிகர்கள் கையில்தான் இருக்கிறது.
ஆனால் அதற்கு முன்பாக அந்த திரைப்படம் யூகத்தின் அடிப்படையில் விலைபேசி முடிவு செய்த பிறகே திரையிடப்படுகிறது. எந்த ஒரு தொழிலிலும் லாப நஷ்டம் உண்டு. இதை யாரும் வெளியில் சொல்வதில்லை.
அது போன்றுதான், லிங்கா படத்தின் மூலம் அதிக லாபம் வரும் என்று எதிர்ப்பார்த்து செய்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், அந்த நஷ்டத்தை படத்தில் நடித்த நடிகரிடம் கேட்பதைவிட, தயாரிப்பாளரை அணுகி கோரிக்கையைச் சொல்லலாம்.
ஏனென்றால் தங்கள் படத்தில் இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து தங்கள் விநியோகத்தில் சலுகை செய்து இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று வணிக ரீதியாக அணுகலாம் அதில் தவறில்லை. அதேசமயம் அந்த படத்தின் நடிகரிடம் கேட்பதில் நியாயம் இருக்க முடியாது. ஒவ்வொரு நடிகர் படமும் ஏற்ற இறக்கத்துடன் வசூல் செய்கிறது. அதை யாரும் முன்கூட்டி சரியாக கணக்கிட முடியாது.
லாபம் கிடைக்கும்போது சந்தோஷப்பட்டுவிட்டு, வருவாய் இழப்பு ஏற்படுகிறபோது மட்டும் அந்த படத்தின் நடிகர் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என்றால் எந்த ஒரு நடிகரும் அதை பின்பற்ற முடியாது.
எனவே திரைப்பட விநியோகஸ்தர்கள் ‘லிங்கா' திரைப்பட தயாரிப்பாளரை அணுகி தங்கள் குறைகளை முறையிட வேண்டுமே தவிர, தன் உழைப்பை தந்து படத்தை முடித்து கொடுத்த நடிகரை (ரஜினிகாந்த்) அணுகி நஷ்டத்தை பற்றி விவாதிப்பது தவறான முன் உதாரணமாக அமைந்துவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.."
-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Post a Comment