சூப்பர் ஸ்டார் ரஜினி மரியாதைக்குரியவர். நான் அரசியலில் இணைந்ததற்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் பெயரை இழுக்க வேண்டாம் என்று இயக்குநர் கஸ்தூரி ராஜா கூறியுள்ளார்.
திரைப்பட இயக்குனரும், நடிகர் தனுசின் தந்தையுமான கஸ்தூரி ராஜா திடீரென பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.
கோவை வந்த அகில இந்திய பாரதீய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து அக்கட்சியில் சேர்ந்தார்.
கஸ்தூரிராஜா ரஜினியின் சம்பந்தி என்பதால், ரஜினி ஆலோசனைப்படி அவர் பாஜகவில் சேர்ந்ததாக சிலர் கூறினர்.
இந்த நிலையில் பாரதீய ஜனதாவில் இணைந்தது குறித்து கஸ்தூரி ராஜா கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வரும் திட்டங்களில் ஈர்க்கப்பட்டு பாரதீய ஜனதாவில் இணைந்தேன். அவர் இந்தியாவை வல்லரசாக மாற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்தியாவை ஒட்டு மொத்தமாக வளர்ச்சிப் பாதைக்கு அழைத்து செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
என் உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுகிறது. அதே நேரம் இந்தியா என்பது உயிர் போன்றது. நாட்டை சிறப்பாக வழி நடத்தும் நரேந்திர மோடி பின்னால் அணிவகுப்பது எனது கடமை என கருதுகிறேன். கட்சி மேலிடத்தின் முடிவுகளை ஏற்று இனி செயல்படுவேன்.
ரஜினி தூண்டுதல் பேரில் பாரதீய ஜனதாவில் நான் சேர்ந்ததாக வரும் தகவல்களில் உண்மையில்லை. பாரதீய ஜனதாவில் சேர வேண்டும் என்பது நானாக எடுத்த முடிவு ரஜினி மரியாதைக்குரியவர். இதில் அவரை இழுக்க வேண்டாம்.. அவருக்கும் என் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை," என்றார்.
Post a Comment