லிங்கா பட விவகாரத்தை சுமூகமாக தீர்த்து வைத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளனர் விநியோகஸ்தர்கள்.
இதுகுறித்து அவர்கள் இன்று நாளிதழில் விளம்பரம் வெளியிட்டுள்ளதோடு, நன்றி அறிக்கையும் வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கை:
‘லிங்கா' பட நஷ்டஈடு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தவர்களில் சரத்குமாரும், கலைப்புலி தாணுவும் முக்கியமானவர்கள். கலைக்குடும்பத்தில் கலகம் கூடாது என்று உழைத்தனர்.
10 கோடி ரூபாய் பணத்தை வாங்கி விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பிரித்து கொடுக்க கலைப்புலி தாணு பட்டபாட்டை பார்த்த போது அவரது பதவி முள் கிரீடம் என தெரிந்து கொண்டோம்.
ராக்லைன் வெங்கடேஷ் எங்களை உபசரித்ததை பார்த்த போது அவரை போய் கன்னடர் என பேசி விட்டோமே என்று மனம் கூனி குறுகுகிறது. வில்லுக்கு விஜயன் விருந்தோம்பலுக்கு ராக்லைன் வெங்கடேஷ்தான்.
பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நிவாரணமாக எதையாவது செய்து சந்தோஷப்படுத்துங்கள் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார். அதை ஏற்று நஷ்டஈடு வழங்கினார் ராக்லைன் வெங்கடேஷ். வேந்தர் மூவிஸ் இதில் பங்கு கேட்பது ஒன்றும் ஏற்புடையதாக இல்லை. திங்கட்கிழமை திரையரங்கு உரிமையாளர்களுடன் நடக்கும் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
முதல் கட்டமாக வைப்பு தொகை திருப்பி தரப்படும் என தெரிகிறது. மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையிட்டவர்களுக்கு எங்களால் இயன்ற நிவாரணத்தை வழங்குவோம் என்ற உத்தரவாதத்தை வைக்கிறோம். எல்லா விநியோகஸ்தர்களும் தொடர்ச்சியாக படங்களை வெளியிட இருப்பதால் திரையரங்க உரிமையாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.
எங்களுக்கு உதவிய சூப்பர் ஸ்டார் ரஜினி, ராக்லைன் வெங்கடஷ், சரத்குமார், கலைப்புலி தாணு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Post a Comment